மொத்த வேட்பாளர்கள் 845 பேரில் 55 பேர் மட்டும்தான் பெண்கள்...!
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 லோக்சபா தொகுதிகளில் 845 வேட்பாளர்கள் இறுதியாக களத்தில் நிற்கும் நிலையில் அவர்களில் வெறும் 55 பேர் மட்டுமே பெண்கள்.
பெண்களுக்கு 33 சதவீதம் தர வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் உரத்துக் குரல் கொடுத்துக் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் உண்மையான அக்கறையை யாரும் காட்டுவதாகத் தெரியவில்லை.
ராகுல் காந்தியோ 50 சதவீதம் தருவோம் என்று முழங்குகிறார். ஆனால் நிஜத்தில் 10 சதவீதம் கூட யாருமே பெண்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை. இதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.
தமிழக தேர்தல் களத்தில் தற்போது வெறும் 55 பெண்களே களத்தில் உள்ளனர். இதில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மிக மிக குறைவு என்பதுதான் வேதனை.
மொத்தத்தில் 7 சதவீதம் மட்டுமே
மொத்த வேட்பாளர்களில 7 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள் ஆவர்.
ஆனால் 2009க்குப் பரவாயில்லை
ஆனால் 2009 லோக்சபா தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது பரவாயில்லைதான். அந்தத் தேர்தலில் மொத்தம் போட்டியிட்ட 823 பேரில் 5.83 சதவீதம் பேர்தான் பெண்கள்.
அரவாணிகள் பிரிவில் ஒரே ஒரு வேட்பாளர்
அரவாணிகள் பிரிவில் ஒரே ஒரு வேட்பாளர் களத்தில் இருக்கிறார்.
சென்னையில் மொத்தம் 106 பேர்
சென்னையில் மொத்தம் 3 தொகுதிகள் உள்ளன. இதில் அதிகபட்சமாக வட சென்னையில் 45 பேரும், தென் சென்னையில் 42 பேரும், மத்திய சென்னையில் 19 பேரும் போட்டியிடுகிறார்கள். அதாவது மொத்தமாக 106 பேர் போட்டியிடுகிறார்கள்.
மதுரையில் 34 பேர்
மதுரை லோக்சபா தொகுதியில், 34 பேர் போட்டியிடுகிறார்கள். ராமநாதபுரத்தில் 33 பேரும், திருச்சியில் 31 பேரும், நெல்லையில் 30 பேரும் களத்தில் உள்ளனர்.
தயாநிதி மாறனுக்கு கூட்டம் கம்மி
மத்திய சென்னையில் முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் போட்டியிடுகிறார். அவரையும் சேர்த்து இங்கு மொத்தமே 19 பேர்தான் போட்டியிடுகிறார்கள்.