தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி உயிருக்கு ஆபத்தா....?
சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலையம் மற்றும் மயிலாப்பூர் துணை ஆணையர் ஆகியோரிடம் ராமசாமி தரப்பில் ஒரு புகார் தரப்பட்டுள்ளது. அதில்தான் இப்படி அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ராமசாமி தரப்பில் கொடுத்துள்ள புகாரில், நான் வசித்து வரும் வீட்டில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், மும்பையை சேர்ந்த தியோலால் என்பவர் தலைமையில், வீட்டை சுற்றி காவலாளி என்ற பெயரில் மர்ம நபர்கள் ஏராளமானோர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
அதனால் என் சுதந்திரம் பறிக்கப்பட்டு இருப்பதாக கருதுகிறேன். அவர்களை நிறுத்தி வைத்து இருப்பதில், உள்நோக்கம் இருப்பதாக கருதுகிறேன். எனவே, கண்காணிப்பு கேமராக்களையும், காவலாளிகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாம்.
குடும்பப் பிரச்சினை காரணமாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் ராமசாமி கொடுத்துள்ள புகாரைத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.