ஜெ. தொடர்ந்த அவதூறு வழக்குக்கு இடைக்கால தடை! சென்னை வருவதில் இருந்து தப்பிய சு.சாமி!!
சென்னை: பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி மீது முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்து பேட்டி அளித்ததற்காக சுப்பிரமணியன் சுவாமி மீதும் அதை வெளியிட்டதற்காக டைம்ப்ஸ் ஆப் இண்டியா மற்றும் தினமலர் நாளேடுகள் மீதும் முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
மேலும் ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்து பதிவு வெளியிட்டதற்காகவும் சுப்பிரமணியன் சுவாமி மீது 3வது அவதூறு வழக்கை முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்குகளில் அக்டோபர் 1-ந் தேதி சுப்பிரமணியன் சுவாமி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் டைம்ஸ் ஆப் இண்டியாவின் ஆசிரியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அம்மனுவில் அவதூறு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சுப்பிரமணியன் சுவாமி மீதான அவதூறு வழக்குக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இதனால் சென்னை நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து சுப்பிரமணியன் சுவாமி தப்பியுள்ளார்.