சில்க் ஸ்மிதா, பிரியா மணி... மற்றும் மதுரை ஆதீனம்!
மதுரை: என் ஆதீனத்திற்கு நிறை நடிகர் நடிகைகள் வந்துள்ளனர். சிவாஜி வந்துள்ளார்.. ஏன் சில்க் ஸ்மிதாவே வந்துள்ளாரே...என்னிடம் திறுநீறு வாங்கிக் கொண்டு போனார். பருத்தி வீரன் பிரியாமணி கூட வந்தார்.. வந்த பிறகுதான் அவருக்கு அவார்டே கிடைத்தது என்று ஒரு பேட்டியில் சிலாகித்துக் கூறியுள்ளார் மதுரை ஆதீனம்.
மதுரை ஆதீனத்தின் ஒருபக்கம் ரொம்ப ஆன்மீக மயமானது என்றால், மறுபக்கம் மகா சுவாரஸ்யமானது.
சீரியஸாகவும் பேசுவார்.. கிச்சுகிச்சென சிரிக்கவும் வைப்பார்.. டென்ஷன்படுத்தவும் செய்வார்.. டெர்ரிபிளாகவும் சில நேரங்களில் பேசுவார்.
அப்படி ஒரு பேச்சை, பேட்டியை விகடனுக்குக் கொடுத்துள்ளார் ஆதீனம். வாங்க படிச்சுப் பார்ப்போம்.
அம்மாவை மறந்துட்டீங்களேப்பா...
வரும் தேர்தலில் நரேந்திர மோடி, ராகுல் காந்தி... இருவரில் யார் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
இவர்களைத் தவிர மூன்றாவதாக ஒருவர் இருக்கிறாரே... அவரை ஏன் விட்டுவிட்டீர்கள்? தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்திவரும் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பிரதமர் பதவியில் அமர்வார். ஆம், அம்மாதான் அடுத்த பிரதமர்!
எல்லா நடிகர்களையும் பிடிக்குமே...
உங்களுக்கு சினிமா பிடிக்கும் என்று எங்களுக்குத் தெரியும். சினிமாவில் எந்த நடிகர், நடிகைகளைப் பிடிக்கும்?
எனக்கு எல்லா நடிகர்களையும் பிடிக்குமே. இன்னார்தான் பிடிக்கும் என்று சொல்லி மற்ற பலர் மனதைப் புண்படுத்துவது எனக்குப் பிடிக்காது
விஜயகாந்த்.. சிவாஜி
யார் மனமும் புண்படாமல் தகவல்களைப் பகிரலாமே..!
விஜயகாந்த் என் மடத்துக்கு வந்திருக்கிறார். சிவாஜியை சில நிகழ்ச்சிகளில் சந்தித்து உரையாடியிருக்கிறேன்.
சில்க் ஸ்மிதா...
சில்க் ஸ்மிதா வெகு பிரபலமாக இருந்தபோது, மடத்துக்கு வர அனுமதி கேட்டார். மடத்தின் மாண்பை மதித்து வரவேண்டுமென்று அனுமதி கொடுத்தேன். அவர் வரும் தகவல் தெரிந்து மடத்தின் வாசலில் பெரும் கூட்டம். நெரிசலை சமாளித்து உள்ளே வந்த சில்க், 1,000 ரூபாய் பாதகாணிக்கை வைத்து என்னை வணங்கினார்.
ஆறுதல் கூறி திறுநீறு கொடுத்தேன்
என்ன பிரச்னை? என்றேன். எனக்கு அழகு இருக்கிறது. புகழ் இருக்கிறது. பணம் இருக்கிறது. ஆனால், மனநிம்மதி இல்லை! என்றார். எல்லாம் தீரும் என்று ஆறுதல் கூறி அவருக்குத் திருநீறு கொடுத்தேன்.
நீயெல்லாம் நல்லா வருவம்மா.. பிரியா மணிக்கு ஆசி
சில வருடங்களுக்கு முன்பு பருத்திவீரன் ப்ரியாமணி ஆசி வாங்க வந்தார். நீ சிறப்பாக வருவாய் என வாழ்த்தினேன். அடுத்த சில நாட்களிலேயே, சிறந்த நடிகைக்கான மத்திய அரசு விருது அவருக்குக் கிடைத்தது!''
நோ.. நோ.. நோ.. கமெண்ட்ஸ்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்த் யாரோடு கூட்டணி வைப்பார் சந்நிதானம்? என்ற கேள்விக்கும், உங்கள் நண்பர் ம.நடராசன் தேர்தல் கூட்டணிகள் தொடர்பாக உங்களிடம் ஆலோசிப்பாரா? என்ற கேள்விக்கும், உங்கள் நண்பர் நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் மற்றும் நடிகர் கார்த்திக்கின் அரசியல் வியூகங்கள் என்னவாக இருக்கும்? என்ற கேள்விக்கும் ஆதீனம் அளித்த பதில்...''நோ கமெண்ட்ஸ்!''
ரஞ்சிதாவுக்கும் நோ கமெண்ட்ஸ்...தான்
நடிகை ரஞ்சிதாவுக்கு நித்தியானந்தா தீட்சை கொடுத்து, துறவி ஆக்கியிருக்கிறாரே... ஆதீனம் என்ற முறையில் ரஞ்சிதாவுக்கு உங்கள் ஆலோசனை ஏதாவது என்ற கேள்விக்கும் ஆதீனம் நோ கமெண்ட்ஸ் என்றுதான் பதில் கொடுத்தார்.
காபி மெஷினில் ஞானப் பால்
நித்தியானந்தா இருக்கும்போது மடத்தில் காபி மெஷின் மூலம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஞானப்பால், தற்போது வழங்கப்படுவது இல்லையாமே?
இது அபாண்டமான குற்றச்சாட்டு! இப்போதும் மடத்தில் ஞானப்பால் வழங்கப்படுகிறது. ஆனால், மெஷின் மூலம் அல்ல. இறைவன் அருளோடு மனிதக் கரங்களால் தயாரிக்கப்பட்டு, வழங்கப்படுகிறது. உங்களுக்கு ஒரு டம்பளர் வேண்டுமா? என்று கேட்டு அதிர வைத்தார் ஆதீனம்.