ஜெயலலிதாவுக்கு சிறை: மதுரை ஆதீனம் உண்ணவிரதம்!
மதுரை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதித்ததை எதிர்த்து மதுரையில் அதிமுகவினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதரும் கலந்து கொண்டார்.
சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூரு தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து சிறையில் அவர் அடைக்கப்பட்டார். அவருடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரதமும் நடந்து வருகிறது. மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், இன்று தீர்ப்பை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.
மதுரை மேலமாசி வீதி-வடக்கு மாசி வீதி சந்திப்பில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் துரைப்பாண்டியன் தலைமை தாங்கினார். மேயர் ராஜன்செல்லப்பா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்ட பெரும்பாலானோர் கருப்பு உடை அணிந்தும், வாயில் கருப்பு துணி கட்டியும் அமர்ந்து இருந்தனர்.
அ.தி.மு.க.வினரின் இந்த உண்ணாவிரதத்தில் மதுரை ஆதீனமும் பங்கேற்றார். காலை 7 மணி முதலே உண்ணாவிரத பந்தலுக்கு கட்சியினர் ஊர்வலமாக வரத் தொடங்கினர். இதனால் 9 மணிக்குள்ளாக அந்த இடம் நிரம்பி காணப்பட்டது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு திருப்பி விடப்பட்டது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.