"தொட்ட இடம் துலங்க வரும் தாய்க்குலமே வருக" ... "ஜெ ஜெ" என ஜொலிக்கும் மதுரை!
மதுரை: முதல்வர் ஜெயலலிதா வருகையையொட்டி மதுரை முழுவதும் ஜெயலலிதாவை வரவேற்றும், புகந்தும் கட் அவுட்கள், பேனர்கள், போஸ்டர்கள், வரவற்பு தட்டிகள் என மதுரையே விழாக்கோலம் பூண்டுள்ளது.
எங்கு பார்த்தாலும் முதல்வர் முகமாக இருக்கிறது. இது வெறும் மதுரையா இல்லை "ஜெயமதுரையா" என்று கேட்கும் அளவுக்கு தடபுடலாக அசத்தியுள்ளனர் ரத்தத்தின் ரத்தங்கள். பாராட்டு விழா நடைபெறும் இடம் அதை விட பிரகாசமாக ஜொலிக்கிறது.
மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் ஜீவநாடியாக முல்லைப் பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையின் நீர்மட்டத்தை முதற்கட்டமாக 142 அடியாக உயர்த்துவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது. இந்தத் தீர்ப்பைப் பெற்று அதை நடைமுறைப்படுத்திய முதல்வர் ஜெயலலிதாவுக்கு முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் நன்றி தெரிவிக்கும் விழா மதுரையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்படுகிறது.
பல லட்சம் பேர் உட்காரும் வகையில் பந்தல்
மதுரை உள்வட்டச்சாலை பாண்டிகோவில் அருகில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. 7 லட்சம் பேர் உட்காரும் வகையில் பந்தலில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன.
முகப்பில் பெரியார்
கோட்டை வடிவிலான முகப்பு அமைக்கப்பட்டு, பெரியாறு அணை போன்று மாதிரி வடிவமும் மிகப்பெரியஅளவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இரவை பகலாக்கிடும் வகையில் விளக்குகள் போடப்பட்டுள்ளன.
4.30 மணிக்கு விழா
பாராட்டு விழா மாலை 4.30 மணியளவில் தொடங்குகிறது. விழாவுக்கு கம்பம் பள்ளத்தாக்கு நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாக உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்குகிறார். வைகை பாசன விவசாயிகள் சங்க ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் மதுரைவீரன், தமிழக விவசாயிகள் சங்க மதுரை மாவட்ட செயலாளர் பனையூர் அழகுசேர்வை, அகில இந்திய பார்வர்டுபிளாக் தமிழ் மாநிலச் செயலாளர் பி.வி.கதிரவன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். பெரியாறு பாசன விவசாயிகள் சங்க பகிர்மானக்குழு தலைவர் அருள்பிரகாசம் வரவேற்றுப் பேசுகிறார்.
வரவேற்பு பேனர்கள்
முதல்வர் வருவதையொட்டி அவரை வரவேற்கும் வரவேற்பு பேனர்கள் மதுரை முழுவதும் நீக்கமறக் காணப்படுகின்றன.
ராட்சத பலூன்கள்
இதுதவிர விழா நடக்கும் இடம் உள்பட நான்கு இடங்களில் முதல்வரம் முகம் பதித்த நான்கு ராட்சத ஹாட் ஏர் பலூன்களும் பறக்க விடப்பட்டுள்ளன.