ஜெ. மீதான வருமான வரி வழக்கை விசாரித்த நீதிபதி தட்சிணாமூர்த்தி மாற்றம்!
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்ற நீதிபதி தட்சிணாமூர்த்தி திடீரென மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சிபிஐ நீதிமன்ற நீதிபதி மாலதி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் 1993-94 ஆண்டுக்குரிய வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை. இதுபோல அவர்கள் இருவரும் பங்குதாரர்களாக இருந்த சசி என்டர்பிரைஸஸ் நிறுவனம் 1991-92, 1992-93, 1993-94 ஆகிய நிதியாண்டுக்களுக்கான வருமான வரி கணக்கையும் தாக்கல் செய்யவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பாக வருமான வரித் துறை தொடர்ந்த வழக்கு சென்னை எழும்பூரில் உள்ள பெருநகர கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி ஜெயலலிதாவும் சசிகலாவும் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு 2006-இல் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து இருவரும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் கடந்த ஜனவரி 30-ந் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. அப்போது இது தொடர்பான வழக்கு விசாரணையை 4 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவின்படி எழும்பூரில் உள்ள சென்னை பெருநகர கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வருமான வரி வழக்கை முடிப்பதற்காக சென்னை பெருநகர கூடுதல் நீதிமன்றத்துக்கு அளித்துள்ள நான்கு மாத காலம் போதாது; மேலும் 4 மாத காலம் அவகாசம் அளிக்க வேண்டும் எனக் கோரி ஜெயலலிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதை ஏற்று ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மீதான வருமான வரி வழக்கு விசாரணைக்கு மேலும் 3 மாதங்கள் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் பெருநகர கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி (மாஜிஸ்திரேட்) தட்சிணாமூர்த்தி இன்று திடீரென மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சிபிஐ நீதிமன்ற நீதிபதியாக இருந்த மாலதி நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய உயர்நீதிமன்ற பதிவாளர் கலையரசன், எழும்பூர் நீதிமன்றத்தில் மேலும் 3 நீதிபதிகளும் மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.