கணவரால் கர்ப்பமாகிய வேலைக்காரப் பெண்– ஏற்றுக் கொண்ட மனைவி!
நாகர்கோவில்: நாகர்கோவிலில் மனைவியின் உதவிக்காக வந்த வேலைக்கார பெண்ணை கணவர் கர்ப்பமாகியதால் அந்த நபரின் மனைவியே அப்பெண்ணை ஏற்றுக் கொண்டுள்ளார்.
நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், ஆசிரியை ஒருவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை.
நாகர்கோவிலில் தனியார் நிறுவனம் ஒன்றில் அந்த இளைஞர் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி பிரபல பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர்களின் உறவினர் பெண் ஒருவரும், இவர்களுடன் தங்கி இருந்து வீட்டு வேலைகளை கவனித்து வந்தார். அந்த பெண்ணுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
வீட்டில் தங்கி இருந்த பெண்ணுடன் ஆசிரியையின் கணவர் நெருக்கமாக பழகினார். இதனால் அந்த பெண் கர்ப்பமானார். பிரச்னை மகளிர் காவல் நிலையம் வரை சென்றது. போலீசார் விசாரணைக்காக அழைத்த போது இளம்பெண்ணின் கர்ப்பத்துக்கு நான் காரணம் அல்ல. நான் ஆண்மை அற்றவன் என்று கூறி அந்த வாலிபர் நாடகம் ஆடினார்.
ஆனால் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மையை ஒப்புக் கொண்டார். பின்னர், குடும்பத்தினரை அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தனது கணவரால் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை ஏற்றுக் கொள்ள ஆசிரியை சம்மதித்தார்.
இதற்கு ஆசிரியை குடும்பத்தினரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. அவளுக்கு பிறக்கும் குழந்தையை என் குழந்தையாக நினைத்து நான் வளர்ப்பேன் என கூறி அந்த இளம்பெண்ணை ஆசிரியை கரம் பிடித்து அழைத்து சென்ற சம்பவம் அங்கு அனைவரையும் நெகிழ வைத்தது.