செப்டம்பர் மாதம் செவ்வாய் கிரக சுற்றுப்பாதைக்குள் நுழையும் “மங்கள்யான்” - இஸ்ரோ
சென்னை: மங்கள்யான் விண்கலமானது வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி அன்று செவ்வாய் கிரக சுற்றுப்பாதைக்குள் நுழையும் என்று இஸ்ரோ மகிழ்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
செவ்வாய் கிரகம் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ உருவாக்கிய மங்கள்யான் என்ற விண்கலத்தை இந்தியா அனுப்பி உள்ளது.
450 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த விண்கலம் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
சூரியனைச் சுற்றி சுமார் 680 மில்லியன் கிலோமீட்டர் பயணத்தை 300 நாட்களில் பூர்த்தி செய்யவுள்ள மங்கள்யான், வரும் செப்டம்பர் மாதம் செவ்வாய் கிரகத்தை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தனது பயணத்தில் 86 சதவீதத்தை நிறைவு செய்து விட்ட மங்கல்யான், ஏற்கனவே திட்டமிட்டபடி அடுத்த மாதம் 24 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதைக்குள் நுழையும் என்று சென்னையில் நேற்று பேட்டியளித்த "இஸ்ரோ" தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.