ம.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது… 40 தொகுதிகளில் வைகோ பிரச்சாரம்
சென்னை: மதிமுக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வைகோ பிரச்சார சுற்றுப்பயணமும் நாளை வெளியாகிறது.
பா.ஜ.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க.வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர், ஈரோடு, தூத்துக்குடி, காஞ்சிபுரம் ஆகிய தொகுதிகள் ஏற்கனவே ம.தி.மு.க.வுக்கு உறுதி செய்யப்பட்டு விட்டது. மீதம் உள்ள மூன்று தொகுதிகளாக ஸ்ரீபெரும்புதூர் தென்காசி, கடலூர், தேனி ஆகியவற்றில் மூன்றை ஒதுக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடந்தது.
ஏழு தொகுதி உறுதி
நேற்று நடந்த இறுதிகட்ட பேச்சு வார்த்தையின் போது ம.தி.மு.க. போட்டியிடும் 7 தொகுதிகளும் உறுதி செய்யப்பட்டுவிட்டன. பாஜக கூட்டணி கட்சிகளின் தொகுதி பட்டியலை ராஜ்நாத் சிங் இன்று வெளியிடுகிறார்.
விருதுநகரில் வைகோ
இதையடுத்து, ம.தி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல் தயாராகி உள்ளது. வைகோ விருதுநகரில் போட்டியிட முடிவு செய்துள்ளார். மற்ற தொகுதிகளிலும் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு விட்டது.
வேட்பாளர் பட்டியல்
ம.தி.மு.க. வேட்பாளர்கள் 7 பேரின் பெயர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இதை வெளியிடுகிறார்.
சுற்றுப்பயண விபரம்
இதுபோல், வைகோவின் தேர்தல் பிரசார சுற்றுப் பயண விவரமும் நாளை வெளியிடப்படுகிறது. ம.தி.மு.க. தலைமைக் கழகம் இதை வெளியிடுகிறது.
40 தொகுதிகளில் வைகோ
இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் வைகோ சுற்றுப் பயணம் செய்கிறார். அப்போது ம.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.