பாஜக கூட்டணியை விட்டு விலக மதிமுக முன் வைக்கப் போகும் காரணங்கள்...
சென்னை: பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணியை விட்டு வெளியேறி திமுக அணியில் சேருவது என முடிவு செய்துள்ள மதிமுக ஏன் விலகுகிறோம் என்பதற்கான காரணங்களையும் அடுக்கத் தொடங்கியுள்ளது.
லோக்சபா தேர்தலின் போது பாஜக அணியில் முதல் கட்சியாக சேர்ந்தது மதிமுக. ஆனால் தொகுதிப் பங்கீட்டில் மதிமுகவை ஒரு பொருட்டாக மதிக்காமல் பாஜக நடந்து கொண்டது.
லோக்சபா தேர்தலில் மதிமுக படுதோல்வியை சந்தித்தது. ஆனாலும் மத்தியில் பாஜக வென்று ஆட்சி அமைத்தது. இதனால் வைகோவுக்கு ஏதாவது ஒரு மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா சீட் கிடைக்கும், அமைச்சர் பதவி கூட கிடைக்கும் என்றெல்லாம் பேசப்பட்டது.
ராஜபக்சே அழைப்பு
ஆனால் மோடி பதவியேற்புக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்த போது, கண்ணீர்விட்டு கெஞ்சி தடுக்க முனைந்தார் வைகோ. மோடியையே நேரில் பார்த்து சிடிக்கள் எல்லாம் கூட கொடுத்தார். ஆனாலும் ராஜபக்சே அழைக்கப்பட்டார். வைகோவும் டெல்லியில் மதிமுக தொண்டர்களுடன் போராட்டம் நடத்தி கைதானார்.
16 அறிக்கைகள்
அதன் பின்னர் இதுவரை மோடி தலைமையிலான மத்திய அரசை விமர்சித்து 16 முறை அறிக்கைகளை வெளியிட்டுள்ளார் வைகோ. இந்த நிலையில்தான் திடீர் திருப்பமாக திருவள்ளூர் மாநாட்டில் திமுக தலைவர் கருணாநிதியை புகழ்ந்து பேசினார்.
பிரம்மாண்ட கூட்டணி
இதனைத் தொடர்ந்து திமுக தலைமையில் மதிமுக, தேமுதிக, காங்கிரஸ் இடம்பெறும் மாபெரும் கூட்டணி உருவாகத் தொடங்குகிறது என்பது வெளிச்சத்துக்கு வந்தது. இப்போது தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் மதிமுகவினர் வெளிப்படையாக மோடி அரசை விமர்சித்து வருகின்றனர்.
காரணங்கள்
இதனடிப்படையில் பாஜக கூட்டணியைவிட்டு விலகி திமுக அணியில் இணைவதற்காக மதிமுக சொல்லப் போகும் காரணங்கள் இவைதான்..
பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சேவை அழைக்க வேண்டும் என்று நேரில் போய் கெஞ்சிப் பார்த்தார் வைகோ. சிடி கொடுத்துப் பார்த்தார்.. ஆனால் அதை பொருட்டாகவே மோடி மதிக்கவே இல்லை.
செவிமடுக்காத பாஜக
மத்தியில் ஆட்சியில் அமர்ந்த நாள் முதல் ஈழத் தமிழர் பிரச்சனையில் தமிழகத்தின் குரலை பாஜகவே செவிமடுக்கவே இல்லை.
மீனவர் பிரச்சனை
தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண்பேன் என்று உறுதியளித்த பாஜக அப்படி ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கவில்லை. - பாரதிய ஜனதாவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி, ராஜபக்சேவிடம் மீனவர் படகுகளை பிடித்து வைக்க சொன்னதை டெல்லி மேலிடம் கண்டிக்கவில்லை
ஐ.நா. குழு
இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்த ஐ,நா, விசாரணைக் குழுவுக்கு மத்திய அரசு விசா வழங்கவில்லை. அத்துடன் ஐ.நா. சபையில் ராஜபக்சே பேசுவதை எதிர்க்க வேண்டும் என்ற குரலையும் கண்டுகொள்ளவில்லை.
ஆசிய அரசியல் கட்சிகள் மாநாடு
இலங்கையில் நடைபெற்ற ஆசிய அரசியல் கட்சிகள் மாநாட்டுக்கு பாஜக மேலிடப் பிரதிநிதிகளை அதுவும் தமிழ்நாட்டு பொறுப்பாளரை அனுப்பி வைத்து உதாசீனப்படுத்தியது.
காங்கிரஸ் பெட்டர்
தற்போதைய மோடி அரசுக்கு முந்தைய காங்கிரஸ் அரசு பரவாயில்லையே என்ற நிலையை உருவாக்கிவிட்டது பாஜக.
இந்த காரணங்கள் நிச்சயமாக மதிமுக முன்வைக்கப் போகும் பட்டியலில் இருக்கும் என்பதைத்தான் அக்கட்சியின் நிர்வாகிகளின் தொலைக்காட்சி விவாதப் பேச்சுகள் வெளிப்படுத்துகின்றன.