வருகிறது திமுக தலைமையில் மெகா கூட்டணி.. டாக்டர் கிருஷ்ணசாமி
கடந்த சட்டசபைத் தேர்தலை அதிமுக கூட்டணியில் இணைந்து சந்தித்து 2 இடங்களில் வென்ற டாக்டர் கிருஷ்ணசாமி வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளார்.
தென்காசிக்கு வந்த அவர் அங்கு மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திமுக தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் இடம் பெற்றிருப்பதற்கு பொதுக்குழுவில் முழு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பதை சொல்வதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது.
தி.மு.க. கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் பல புதிய கட்சிகள் கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளது. இதனால் தி.மு.க. கூட்டணி மெகா கூட்டணியாக உருவாகும். புதிய தமிழகத்தை பொறுத்தவரை எப்பவுமே தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம்.
தென் தமிழக மக்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்கும் வகையிலும், அங்கீகாரம் கிடைக்கும் வகையிலும் நாடாளுமன்ற தேர்தலில் பிரசாரத்தை முன்நிறுத்துவோம்.
நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர்களை முன்னிறுத்தி தேர்தல் நடத்திய வரலாறு இதுவரை கிடையாது. தேர்தலுக்கு பிறகு வெற்றி பெற்ற எம்.பி.க்களின் அடிப்படையில்தான் பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்திருக்கிறார்.
தேசிய அரசியலில் கடந்த 20 ஆண்டுகளில் மாநில, பிராந்திய கட்சிகளின் ஆதிக்கம் தான் அதிகம் இருந்திருக்கிறது என்றார்.