நெல்லை: பதற்றமான வாக்கு சாவடிகளில் பணியாற்றும் மைக்ரோ அப்சர்வர்களுக்கு பயிற்சி
நெல்லை: நெல்லையில் பதற்றமான வாக்கு சாவடிகளை கண்காணிக்க மைகரோ அப்சர்வர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேர்தல் பணி தொடர்பாக இன்று பயிற்சி அளிக்கப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் நெல்லை, தென்காசி ஆகிய இரு லோக்சபா தொகுதிகள் உள்ளன. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளை, அம்பை, ஆலங்குளம், ராதாபுரம், நாங்குநேரி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
தென்காசி தொகுதியில் தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், விருதுநகர் மாவட்டத்தை சேர்நத ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய தொகுதிகளும் உள்ளன. இவற்றில் உள்ள 10 தொகுதிகளிலும் 2707 வாக்கு சாவடிகள் உள்ளன. இவற்றில் பதற்றம் நிறைந்த வாக்கு சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன.
இது தவிர 90 சதவிதத்திற்கும் அதிகமாக வாக்கு பதிவு நடக்கும் சாவடிகள் பதற்றம் நிறைந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் 604 வாக்குசாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்கு சாவடிகளில் வாக்கு பதிவு முழுவதும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு ஆன்லைனில் தேர்தல் ஆணையம், நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இணைக்கப்படுகிறது.
மத்திய படையினரும் பாதுகாப்பு பணிக்காக இந்த வாக்கு சாவடிகளில் நிறுத்தப்பட உள்ளனர். இது தவிர வாக்கு பதிவு முழுவதையும் கண்காணிக்க மத்திய அரசு அதிகாரிகள் மைக்ரோ அப்சர்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த 604 வாக்கு சாவடிகளும் 401 இடங்களில் அமைந்துள்ளன.
இங்கு தேர்தல் பணியாற்ற வங்கி துறை அதிகாரிகள், கலால் துறை அதிகாரிகள், தபால் துறை,எல்ஐசி அதிகாரிகள் 401 பேர் மைக்ரோ அப்சர்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதற்றமான வாக்கு சாவடிகளில் தேர்தல் பணியாற்றுவது குறித்து நெல்லை வண்ணார்பேட்டை எப்எக்ஸ் பொறியியல் கல்லூரியில் இன்று பயிற்சி வகுப்பு நடக்கிறது.
நெல்லை தொகுதி தேர்தலை நடத்தும் தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கருணாகரன், தென்காசி தொகுதி தேர்தல் அலுவலர் உமா மகேஸ்வரி ஆகியோர் அலுவலர்களுக்கு பயிற்சிகளை அளிக்கின்றனர்.