பெர்மிஷன் இல்லாமல் 'பேண்டு கச்சேரி'....'ஏர்போர்ர்ட்' நாராயணசாமி மீது வழக்கு!
புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் மீது தேர்தல் விதிமீறியதற்காக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி தொகுதி வேட்பாளராக மத்திய இணையமைச்சர் நாராயணசாமி களமிறங்கியுள்ளார். சிட்டிங் எம்பியான இவர் புதுச்சேரி தொகுதிக்குட்பட்ட மாகி, காரைக்கால், ஏனாம் ஆகிய பகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்து வந்தார்.
கடந்த 18ம்தேதி மண்ணாடிப்பட்டு சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் நாராயணசாமி திறந்த ஜீப்பில் சென்றபடி வாக்கு சேகரித்தார்.
அப்போது திருக்கனூர் கடை வீதியிலும், கூனிச்சம்பட்டு பகுதியிலும் நாராயணசாமியின் வாகனத்தின் முன்பு சென்ற மினி வேனில் பேண்டு வாத்தியங்கள் முழங்கி சென்றன. ஆனால் இந்த வாகனங்களுக்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் பறக்கும்படை அதிகாரியான துணை தாசில்தார் மணிகண்டன் திருக்கனூர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து நாராயணசாமி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக திருக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.