ஸ்டாலின் முகாமுக்கு போன மிசா பாண்டியன்: மீண்டும் திமுகவில் சேர்ப்பு
சென்னை: அழகிரி ஆதரவாளராக இருந்த போது திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்த மிசா பாண்டியன், ஸ்டாலின் ஆதரவாளராக மாறிய உடன் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
திமுக தென் மண்டல முன்னாள் அமைப்புச் செயலாளரும் முன்னாள் திமுக மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர் மிசா பாண்டியன்.
மதுரை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயரான இவர், கடந்த பல ஆண்டுகளாக அழகிரியின் தீவிர விசுவாசியாக இருந்தார்.
திமுகவில் இருந்து நீக்கம்
திமுகவில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் அழகிரி நீக்கப்பட்டபோது, அவருக்கு ஆதரவாக தீவிரமாக குரல் கொடுத்தார். அப்போது மிசா பாண்டியனும் தற்காலிகமாக நீக்கப்பட்டார். எனினும் அழகிரிக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தார்.
அணி மாறிய ஆதரவாளர்கள்
அழகிரியுடன் ஆர்.எம்.கருப்பசாமி, டி.சுப்புலட்சுமி மற்றும் எம்.உதயகுமார், என்.சிவக்குமார், ப.கோபிநாதன், வி.என்.முருகன், ஆர்.எஸ்.ராமலிங்கம், க.இசக்கிமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.கவுஸ்பாட்சா ஆகியோரும் நீக்கப்பட்டனர். பின்னர் அழகிரி ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக ஸ்டாலின் பக்கம் சென்று மீண்டும் கட்சியில் இணைந்து வருகின்றனர்.
ஸ்டாலினுடன் சந்திப்பு
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி திமுக பொதுக் கூட்டத்தில் பங்கேற்க கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு வந்தபோது, மிசா பாண்டியன் தனது ஆதரவாளர்களுடன் ஸ்டாலினை நேரில் சந்தித்து வரவேற்பளித்தார். இது மதுரை திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோபாலபுரத்தில் மிசா பாண்டியன்
மிசா பாண்டியன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பொருளாளர் ஸ்டாலினை சந்திக்க சென்னைக்கு வந்தார்.
விளக்கக் கடிதம்
திமுக தலைமை அலுவலகத்தில் விளக்கக் கடிதம் கொடுத்துவிட்டுச் சென்றார். இதைத் தொடர்ந்து, மிசா பாண்டியன் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
திமுகவில் சேர்ப்பு
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘மதுரை மாநகர் மாவட்டத்தை சேர்ந்த மிசா எம்.பாண்டியன் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, மீண்டும் கட்சிப் பணியாற்ற அனுமதிக்குமாறு திமுக தலைவர் கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தார்.
ஒழுங்கு நடவடிக்கை ரத்து
இந்த கோரிக்கையை ஏற்று, அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. இன்று (சனிக்கிழமை) முதல் கட்சி உறுப்பினராக செயல்பட மிசா பாண்டியன் அனுமதிக்கப்பட்டுள்ளார்'' என்று கூறப்பட்டுள்ளது.
கொலை வழக்கில்
கடந்த 2001ஆம் ஆண்டு மதுரை நிதி நிறுவன அதிபர் ஜெகதீசன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாகசேர்க்கப்பட்டார் "மிசா" பாண்டியன். அப்போது மிசா பாண்டியனை திமுக மேலிடம் கட்சியை விட்டு நீக்கியது. ஆனால் கட்சித் தலைமையுடன் அப்போது கருத்து வேறுபாட்டுடன் இருந்த மு.க.அழகிரி தனது ஆதரவாளரான"மிசா" பாண்டியனை கை விடவில்லை.
திமுக டூ அதிமுக
2001ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது மீண்டும் திமுகவில் சேர்க்கப்பட்ட மிசா பாண்டியன் சென்னையில் ஜெயலலிதாவைச் சந்தித்து அவர் முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார்.
மீண்டும் திமுக
இதற்கிடையில் அடுத்த சில மாதங்களிலேயே திமுகவிற்கு தாவினார். அழகிரி ஆதரவாளராகவே செயல்பட்டு வந்த மிசா பாண்டியன், தற்போது ஸ்டாலின் ஆதரவாளராக மாறியுள்ளார்.