அரசு பேருந்தில் மாணவிகளிடம் சில்மிஷம் - சீவலப்பேரி கண்டக்டரை வெளுத்து வாங்கிய பொதுமக்கள்!!
நெல்லை: நெல்லை அருகே பஸ்சில் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட அரசு பஸ் கண்டக்டரை சக பயணிகள் வெளுத்து வாங்கியதால் பதட்டம் உருவாகியுள்ளது.
நெல்லை டவுனை சேர்ந்தவர் முத்து செல்வன். அரசு பஸ் கண்டக்டர். இவர் கடந்த சில நாட்களாக நெல்லையிலிருந்து கலியாவூர் செல்லும் பஸ்சில் கண்டக்டராக பணி செய்து வந்தார்.
அந்த பஸ்சில் பயணம் செய்யும் மாணவிகளிடம் முத்து செல்வன் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள் எச்சரித்தும் கேட்காததால் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர்.
மாணவிகளின் பெற்றோர் முத்துசெல்வன் மீது சீவலப்பேரி போலீசில் புகார் செய்தனர். மேலும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடமும் புகார் செய்தனர். ஆனால் அதிகாரிகள் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் அவர் மாணவிகளிடம் தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் மாலை அந்த பஸ்சில் கண்டக்டராக முத்துசெல்வன் பணியில் இருந்தார். இதனை பார்த்து ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சீவலப்பேரி அருகே நொச்சிகுளத்தில் பஸ்சை வழிமறித்தனர்.
பின்னர் சில்மிஷத்தில் ஈடுபட்ட முத்துசெல்வனை மரத்தில் கட்டி வைத்து நைய புடைத்தனர். இது குறித்து மகேஷ் என்பவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சீவலப்பேரி போலீசார் வந்து முத்துசெல்வனை மீட்டனர்.
அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கண்டக்டரை பொதுமக்களும், பயணிகளும் வெளுத்து வாங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.