18ல் சென்னையில் நடக்கும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கும் மு.க. ஸ்டாலின்
சென்னை: வரும் 18ம் தேதி சென்னையில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
அனைத்து திருச்சபைகளும் கலந்து கொள்ளும் கிறிஸ்துமஸ் விழாவுக்கு கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழா வரும் 18ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறுகிறது.
சீரோ மலபார் திருச்சபை முதன்மை பேராயர் கார்டினல் ஜார்ஜ் ஆலென்சேரி தலைமையில் நடக்கும் இந்த விழாவில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறார்.
விழாவில் அருட் சகோதரர் பேட்ரிக், சகோதரி சாராள் நவரோஜி, குழந்தை பிரான்சிஸ் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.
விழாவில் முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ், சென்னை மயிலை உயர்மறை மாவட்ட முன்னாள் மேயர் டாக்டர் ஏ.எம்.சின்னப்பா, இந்தியன் மலங்கரா ஆர்த்தடாக்ஸ் திருச்சபை பேராயர் டாக்டர் யோகனன் மார்டியோஸ் கோரோஸ், ஈ.சி.ஐ. திருச்சபை பிரதம பேராயர் எஸ்றா சற்குணம், பெந்தகோஸ்ட் திருச்சபை பெருளாளர் டாக்டர் எடிசன், ஆங்கிலிக்கன் திருச்சபை துணை பிரதம பேராயர் ஜான் சத்தியகுமார், தமிழ்நாடு ஆந்திரா இரட்சண்ய சேனை மாகாண தளபதி இம்மானுவேல், சி.எஸ்.ஐ. திருச்சபை துணை பேராயர் முத்தையா தேவநேசன், அருட் சகோதரி கில்பர்ட்டா, டாக்டர் பால்ரெங்கநாதன், ஆண்ட்ரூ பி.நடராஜன், டாக்டர் எலிசபெத் வர்கீஸ் ஆகியோர் உரை நிகழ்த்துகிறார்கள்.