அடிதடி... மண்டை உடைப்பு... கள்ள ஒட்டு: அமர்களப்பட்ட உள்ளாட்சி இடைத்தேர்தல்!
கோவை: அடிதடி மோதல்கள், மண்டை உடைப்புகள்... கள்ள ஓட்டு புகார்கள் என தமிழக உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று ஒருவழியாக நடந்து முடிந்தது.
தமிழகத்தில், கோவை, தூத்துக்குடி மாநகர மேயர் பதவிகள் காலியாக உள்ளது. இதேபோல், அரக்கோணம், கடலூர், விருத்தாசலம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 4 நகராட்சி தலைவர் பதவிகள், 8 மாநகராட்சி உறுப்பினர் பதவிகள், 23 நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், 39 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் உள்பட தமிழகத்தில் 530 உள்ளாட்சி பதவி இடங்கள் காலியாக இருக்கின்றன.
இந்த பதவிகளுக்கான இடைத்தேர்தலை தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. உள்பட கட்சிகள் புறக்கணித்தனர். அ.தி.மு.க., பா.ஜ.க., கம்யூனிஸ்டு கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 1,486 பேர் போட்டியிட்டனர்.
இந்த இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. இருப்பினும், பல்வேறு இடங்களில் மந்தமான வாக்குப்பதிவே காணப்பட்டது. மாலை 5 மணியுடன் நிறைவு பெற்ற பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் ‘சீல்' வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. வருகின்ற 22 ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
ராமநாதபுரம் ரகளை
ராமநாதபுரத்தில் காலை 7 மணிக்கு துவங்கிய வாக்கு பதிவு மிகவும் மந்தமான நிலையிலேயே இருந்தது. இதனால் பல வாக்கு சாவடி மையங்கள் வெறிச்சோடி கிடந்தன. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட அ.தி.மு.க.வினர், வாக்களிக்க வராத பலரது வாக்குகளை வெளியூரை சேர்ந்தவர்களை கொண்டு வாக்களிக்க வைத்தனர்.
அடிதடி தாக்குதல்
இதுகுறித்து பா.ஜ.க.வினர் புகார் கூறியதை தொடர்ந்து, இரண்டு தரப்பினரும் கம்பு, கற்களை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். நகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த வன்முறையால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது. வன்முறையில் பா.ஜ.க.வினர் 3 பேரின் மண்டை உடைந்தது. அவர்கள் உடனடியாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கள்ள ஓட்டு பதிவு
அ.தி.முக.வினர் கள்ள ஓட்டு பதிவு செய்வது குறித்த அறிந்த பா.ஜ.க. வேட்பாளர் துரைகண்ணன் வாக்கு சாவடிகளுக்கு வந்து பார்வையிட்டார். பின்னர் கள்ள ஓட்டு போடுவது குறித்து போலீசாரிடம் முறையிட்டார். மேலும் முறைகேடாக நடக்கும் இந்த தேர்தலை ரத்து செய்ய கோரி சாலை மறியலில் ஈடுபட போவதாக அறிவித்தார். இதையடுத்து ராமநாதபுரம்-மதுரை சாலையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
படமெடுத்தாலும் போடுவோம்
ராமேஸ்வரத்தில் வசித்து வரும் அ.தி.மு.க. நகர மீனவரணி செயலாளரான வஸ்தாவி என்ற வெற்றிவேல், ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல் நிலைப்பள்ளியில் உள்ள வாக்கு சாவடி ஒன்றில் முகம்மது என்ற வாக்களர் பெயரில் கள்ள ஓட்டு போட்டார். இவர் கள்ள ஓட்டு போட்டது செய்தியாளர்கள் சிலரின் கேமராவில் சிக்கியது. இதே நிலையே நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வாக்கு சாவடிகளிலும் நீடித்தது.
தூத்துக்குடியிலும் கள்ளஓட்டு
இதேபோல தூத்துக்குடியிலும் கள்ள ஓட்டு கனஜோராக நடந்தேறியது. மாலை 3 மணிக்கு மேல் எங்கும் அசாதாரண நிலை ஏற்பட்டது. அதுவரை பதிவாகாத வாக்குகள் அ.தி.மு.க தரப்பினரால் ஓ.கே செய்யப்பட்டு வந்தது. இடையில் ஆய்வுக்கு சென்ற பா.ஜ.க வேட்பாளர் ஜெயலெட்சுமி கொதித்து போனார்.
மயங்கிய ஜெயலட்சுமி
‘நகரச் செயலாளர் ஏசாதுரை தலைமையில் ஒரு டீமும், முன்னாள் கவுன்சிலர் செண்பகசெல்வன் தலைமையில் ஒரு டீமும் பா.ஜ.க. வேட்பாளர் ஜெயலெட்சுமி மற்றும் பா.ஜ.க.வினர் மீது பாய்ந்து அடிதடியில் இறங்கியது. இதில் பா.ஜ.க வேட்பாளர் ஜெயலட்சுமி மயங்கி விழுந்துவிட அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
கலவர பூமியான தூத்துக்குடி
இதையடுத்து, பா.ஜ.க.வினர் இரண்டு இடங்களில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் தூத்துக்குடி கலவர பூமியாக காட்சியளித்தது. உடனே அ.தி.மு.க. சார்பான ஏஜென்டுகள் ‘நாங்க கையெழுத்து போடாம நீங்க எப்படி ஓட்டுபெட்டியை முடிச்சு சீல் வைக்கிறீங்கன்னு பார்ப்போம்' என சொல்லிவிட்டு வாக்குச்சாவடியைவிட்டு வெளியேறி போராட்டத்தில் இறங்கிவிட்டனர். பிரச்னை வெளியே தெரிந்துவிட கூடாது'என சில அ.தி.மு.க. மூத்த தலைகள் சொன்ன பிறகு பிரச்னை சுமூகமாக முடிந்தது.
வாக்குப்பதிவு எவ்வளவு?
ஒருவழியாக மாலை 5 மணியோடு தேர்தல் முடிவடைந்தது. கோவை மாநகராட்சி பதவிக்கான தேர்தலில் 46.51 சதவீதமும், தூத்துக்குடி மேயர் பதவிக்கான தேர்தலில் 54 சதவீத வாக்குகளும், 37வது வார்டில் 63 சதவீத வாக்குகளும், சிவகங்கையில் நகர்புரத்தில் 77 சதவீதமும், ஊராட்சி பகுதியில் 67 சதவீதமும், கடலூர் மாவட்டத்தில் 63 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
இதெல்லாம் சகஜம்தானே
உள்ளாட்சி தேர்தல் என்றாலே மாமன், மச்சான், பங்காளிகள் கூட எதிரெதிர் அணியில் போட்டியிட்டு சண்டை போட்டுக்கொள்வார்கள். கலவரமும், கள்ள ஓட்டுக்களும் சகஜமாக அரங்கேறும். இந்த இடைத்தேர்தலில், அதிமுகவை எதிர்த்து முக்கிய எதிர்கட்சிக்கள் நிற்கவில்லை என்றாலும் பாஜகவிற்கு ஆதரவாக யாரும் ஓட்டு போட்டுவிடக்கூடாது. டெபாசிட் கூட பெற விடக்கூடாது என்ற உத்தரவின் பேரிலேயே அதிமுகவினரை கள்ள ஓட்டு போட வைத்துள்ளனர் என்பது எதிர்கட்சியினரின் குற்றச்சாட்டாகும்.