நரேந்திர மோடியின் சென்னை நிகழ்ச்சிக்கு எதிரான மனு தள்ளுபடி
சென்னையில் இன்று மாலை நானி பல்கிவாலா நினைவு உரையாற்ற வரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அங்கு உரையாற்ற தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் கட்சி வழக்குத் தொடர்ந்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் விடுமுறை கால பெஞ்ச் முன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தமிழகத்தில் மதசார்பின்மையைக் கட்டிக் காக்க மோடியின் உரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் கட்சியின் தலைவர் தங்கத் தமிழ்வேலன் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு இன்று காலை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், முறையான வகையில் மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை. நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று மனுக்களை தாக்கல் செய்வதால் விசாரணைக்கு ஏற்க இயலாது என்று கூறி அதை தள்ளுபடி செய்தனர்.
முன்னதாக தங்கத் தமிழ்வேலன் சென்னை மாநகர கமிஷ்னரிடமும் ஒரு மனு அளித்தார். இந்த நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழகத்தில் நடப்பது முறையற்றது. குஜராத் மதக்கலவரத்தை மனதில் வைத்துப் பார்க்கும்போது அங்கு மோடி உரையாற்றுவது பல்கலைக்கழகத்தின் மதசார்பற்ற நிலைக்கே அபாயத்தை ஏற்படுத்திவிடும்.
கிரிமினல் வழக்கை சந்திக்கும் ஒரு நபர் ஒரு தனியார் அறக்கட்டளைக்காக பல்கலைக்கழகத்துக்குள் வந்து உரையாற்றுவது ஏற்கத்தக்கதல்ல. எனவே, இந்த அனுமதியை ரத்து செய்யுமாறு பல்கலைக்கழக துணை வேந்தருக்கு உத்தரவிட வேண்டும்.
இதே பல்கலைக்கழகத்தில் அமெரிக்க இஸ்லாமிய அறிஞரான அமினா வதூத் உரையாற்றுவதற்கு இதே பல்கலைக்கழகத்துக்கு தமிழக போலீசார் அறிவுறுத்தி, இந்த உரையை நிறுத்தியதை நினைவுகூர்கிறேன் என்று கூறியுள்ளார் தங்கத் தமிழ்வேலன்.
இன்றைய நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அருண் ஷோரி எழுதிய Self-deception: India's China Policies என்ற புத்தகத்தை மோடி வெளியிடுகிறார்.