உங்கள் எதிர்காலக் கனவுகளுக்கு ஆதரவு... நடிகர் விஜயிடம் மோடி செய்த ’பிராமிஸ்’
சென்னை: அரசியல் வட்டாரம் மட்டுமின்றி திரைத்துறையிலும் சிறு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது சமீபத்தில் நடந்த மோடி - விஜய் சந்திப்பு.
நாடு முழுவதும் பிரச்சாரம் மேர்கொண்டு வரும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கடந்த வாரம் சென்னை வந்திருந்தார். அப்போது சூப்பர்ஸ்டார் ரஜினியைச் சந்தித்தார் மோடி. அது அரசியல் ரீதியான சந்திப்பல்ல, வெறும் நலம் விசாரிக்கும் சந்திப்பு தான் எனச் சொல்லப் பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவையில் பிரச்சாரம் மேற்கொள்ள வந்திருந்த மோடியை நடிகர் விஜய் நேரில் சென்று சந்தித்தார். ஏற்கனவே அரசியல் ஆர்வம் கொண்ட விஜயின் இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விரைவில் அரசியல் பிரவேசம் செய்யும் நோக்கத்திலேயே இந்தச் சந்திப்பு நடந்ததாக கட்சிகள் தரப்பிலும், இல்லை சினிமாவில் தனது எதிர்காலத்தை தக்க வைத்துக் கொள்வதற்காகவே என திரை வட்டாரத் தகவல்களும் தெரிவிக்கின்றன.
மக்கள் இயக்கம்...
சினிமாவில் வெற்றித் தடம் பதிக்க ஆரம்பித்த நாளிலேயே விஜய்குள் அரசியல் விதை விழுந்துவிட்டது எனக் கூறலாம். அதன் வெளிப்பாடு தான், ‘மக்கள் இயக்கம்'.
தந்தை மகனுக்காற்றும் உதவி...
விஜயின் வளர்ச்சியில் அவரது அப்பாவின் பங்கும் அளப்பரியாதது. ஏனெனில் மக்கள் இயக்கம் என்ற பெயரில் இயங்கிய ரசிகர் மன்றத்தை, அவரை விட அவருடைய அப்பா இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரன் ஆர்வத்துடன் நடத்தினார்.
கூட்டிக் கழித்துப் பார்த்தா...
விஜய் ரசிகர் மன்றத்தை பலப்படுத்துவதன் மூலம், எதிர்காலத்தில் தான் நடிக்கும் படங்களை ஓட வைக்க முடியும், பிற்காலத்தில் அரசியல் செல்வாக்கை கூட்டிக் கொள்ளலாம் என கணக்குப் போட்டனர்.
காவலனுக்கு வந்த சிக்கல்...
இதற்கிடையே கடந்த தி.மு.க., ஆட்சியில் 'காவலன்' படத்தை வெளியிடுவதில் சிக்கல் உண்டானது. வேறொரு முக்கிய படத்திற்காக தியேட்டர்கள் ஆக்கிரமிக்கப் பட்டு விட தியேட்டர் கிடைக்காமல் திணாடினார் விஜய்.
நண்பேண்டா....
இது தொடர்பாக நண்பன் என்ற முறையில் இத்தகவலை உதயநிதி ஸ்டாலினிடம் கொண்டு போனார் விஜய். ஆனால், அவர் கைவிரித்து விட்டார்.
உங்களுக்கு வயசாயிடுச்சே விஜய்...
இதனால், தி.மு.க.,மீது, விஜய்க்கும், அவருடைய அப்பாவுக்கும் கோபம் உண்டாக டெல்லி சென்று ராகுலைச் சந்தித்தனர். ஆனால், அச்சந்திப்பும் பரபரப்பு இல்லாமல் அடங்கிப் போனது.
அதிமுகவுக்காக பிரச்சாரம்...
இதற்கிடையே 2011ம் ஆண்டுத் தேர்தலில் பத்துத் தொகுதிகள் கேட்டு அதிமுகவை அணுகியது மக்கள் இயக்கம். ஆனால், அதுவும் கிடைக்கவில்லை. ஆனபோதும், சில நகரங்களில் மக்கள் இயக்கத்தின் சார்பில் கூட்டம் போட்டு, அ.தி.மு.க., வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார் விஜய்.
என்னோட ராசிதான்...
எதிர்பார்த்தபடியே, அ.தி.மு.க., தரப்பு அமோக வெற்றிடைந்துவிட, இந்த வெற்றி விஜயால் தான் கிடைத்தது என்பது போல, போஸ்டர் அடித்து ஒட்டினர், ரசிகர் மன்றத்தினர். இதனால், அ.தி.மு.க., மேலிடத்துக்கு விஜய் மற்றும் அவரது அப்பா மீது கடும் கோபம் ஏற்பட்டது.
டைம் டூ பெயில்....
இந்நிலையில், விஜய் நடித்த, 'தலைவா' படத்தில் ‘டைம் டூ லீட்' என்ற வாசகம் இடம் பெற்றது. அதாவது 'தலைவராவதற்கு, ஏற்ற தருணம் இது' என்ற பொருளில். கூடவே, படத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக, 'பஞ்ச்' வசனங்கள் நிறைய உள்ளதாகவும் செய்தி பரவியது. இதனால், படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டது.
புரவிகளில் உலா வந்த புரளி...
இந்நிலையில் படம் ரிலீசானால், தியேட்டர்களில் குண்டு வெடிக்கும் என, யாரோ எழுதிப் போட்ட மொட்டை கடிதத்தை வைத்து, அரசு தரப்பில் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய மாட்டோம் என சொல்ல, சிக்கலில் ஆழ்ந்தார் விஜய்.
கத்தி காயமில்லாமல் தப்புமா...
நீண்ட இழுபறிக்கு பின், படம் ரிலீசாகி, தோல்வியை தழுவியது. அதன் பிறகு, அரசியல் ரீதியாக அமைதியான விஜயின் அடுத்த படமான 'ஜில்லா' எதிர்பார்த்த அளவில் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இப்போது, 'கத்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
'கேப்டன் ' தலைமையில்...
முந்தைய படங்களின் தொடர் தோல்விகளால் துவண்டிருந்த விஜய், மோடியை கோவையில் சந்தித்தார். மோடி எப்படியும் பிரதமராகி விடும்பட்சத்தில், இங்கு அதிகாரத்தில் இருப்பவர்களால், பெரிய அளவில் பிரச்னைகளும் இருக்காது என, சொல்லி, கேப்டன் தான் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் எனச் சொல்லப்படுகிறது.
சட்டசபை தேர்தலுக்காக...
இது ஒருபுறம் இருக்க, வரும் 2016 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து, விஜய், இப்போதே ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார் எனவும் கருத்து நிலவுகிறது. அதாவது லோக்சபா தேர்தல் முடிவுகளைப் பொறுத்து அவர் பா.ஜ.கவில் இணைந்து விடுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.
இது யூகம் தான்....
அது நடக்காத பட்சத்தில் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தி, பா.ஜ.,வோடு கூட்டணி அமைத்து, போட்டியிடுவார் அல்லது, தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைத்துக் கொள்வார் என பலவித யூகங்கள் உலா வருகின்றன.
கனவுகளுக்கு நான் கேரண்டி...
'உங்கள் எதிர்கால கனவுகளுக்கு ஆதரவாக இருப்பேன்' என, விஜயிடம் மோடி சொன்னதன் அர்த்தம் என்ன என்பதை, தேர்தல் முடிவுகளுக்கு பின் நடக்கப் போகும் அரசியல் நிகழ்வுகள் உணர்த்தும் என எதிர்பார்க்கலாம்.