மோடியின் சென்னை கூட்டத்திற்கு விஜயகாந்த் வராதது ஏன்?: இது பாஜக சொல்லும் விளக்கம்
சென்னை: சென்னைப் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத விஜயகாந்த், நாளை சேலத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில் மோடியுடன் பங்கேற்பார் என பாஜக தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். ஆனால், அப்பிரச்சாரக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழகக் கட்சித் தலைவர்களான விஜயகாந்த், ராமதாஸ், வைகோ உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை.
பாமக சார்பில் அன்புமணியும், தேமுதிக சார்பில் சந்திரகுமார் எம்.எல்.ஏவும் மட்டும் கலந்து கொண்டனர். பிரச்சாரம் நடந்த அன்று உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னையில் இருந்த விஜயகாந்தை மோடி சந்திக்கவில்லை, ஆனால் நடிகர் ரஜினிகாந்தை அவர் சந்தித்தார். இதனால் விஜயகாந்த மனவருத்தத்தில் இருப்பதாகக் கூறப்பட்டது. கூட்டணியிலும் சலசலப்பு ஏற்பட்டது.
காரணம், மோடியைப் பிரதமராக்க வேண்டும் என பிரச்சார கூட்டங்களில் தொடர்ந்து முழங்கி வருகிறார் விஜயகாந்த்.
இந்நிலையில், சேலத்தில் நாளை நடைபெற உள்ள பிரச்சாரக் கூட்டத்தில் மோடியுடன் விஜயகாந்த் பங்கேற்பதாக பாஜக அறிவித்துள்ளது. இது தொடர்பாக தி இந்து நாளிதழுக்கு பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளர் மோகன்ராஜூலு கூறியதாவது:
உடம்பு சரியில்லை...
மோடி பிரச்சாரக் கூட்டத்தில் விஜயகாந்த பங்கேற்காததற்கு ஒரு காரணமும் இல்லை. அவருக்கு உடல்நிலை சரியில்லாததைத் தவிர வேறு உள்நோக்கம் கிடையாது.
தேமுதிக வேட்பாளர்கள்...
அவருக்குப் பதிலாக தேமுதிக கொறடா சந்திரகுமார் எம்.எல்.ஏவும், வடசென்னை, மத்திய சென்னை, திருவள்ளூர் தேமுதிக வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.
தொகுதி நிலவரம்...
திங்கட்கிழமை கூட விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோரிடம் தொகுதி நிலவரம் குறித்து பேசினோம்.
மோடியுடன் விஜயகாந்த்...
சேலத்தில் நாளை நடக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் மோடியுடன் விஜயகாந்த் பங்கேற்கிறார். முடிந்தால் கோவைக் கூட்டத்திலும் பங்கேற்பதாக விஜயகாந்த் உறுதி அளித்துள்ளார் என்று கூறியுள்ளார்.