முல்லைப் பெரியாறு தீர்ப்பு.. ஜெ.வுக்கு பாராட்டு விழா- விவசாயிகள் கூடி மதுரையில் நடத்துகிறார்கள்!
மேட்டூர்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி ஆக உயர்த்தும் தீர்ப்பை உச்சநீதிமன்றத்தில் போராடி பெற்றுத் தந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆகஸ்ட் 22ம் தேதி மதுரையில் பாராட்டு விழா நடத்தப்படும் என்று மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணையில் நீர் திறப்பு நிகழ்ச்சிக்காக ஓ.பன்னீர்செல்வம் இன்று வந்திருந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காவிரிப் பாசனப் பகுதி, டெல்டா விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணையில் முன்கூட்டியே நீர் திறந்து விடப்பட்டுள்ளது. முதல்வர் உத்தரவின் பேரில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்டா பகுதிகளில் பாசனம் பயனடையும்.
முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 ஆக உயர்த்த தமிழக முதல்வர் பெரும் முயற்சிகள் மேற்கொண்டார். இதன் காரணமாக தமிழகத்திற்குச் சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. அவர் உச்சநீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற்றமைக்காக அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் பாராட்டு விழா நடக்கிறது.
வரும் 22 ம் தேதி மதுரையில் இந்த விழா நடத்தப்படுகிறது. அதில் கலந்து கொள்ளும் முதல்வர் ஜெயலலிதாவை விவசாயிகள் சிறப்பிக்கவுள்ளனர் என்றார்.