அம்மா பிரதமராவார்... ரைட் நல்லதா ஒரு அம்மா பாட்டு போடு... ஆதினம் அலப்பறை
மதுரை: அம்மா பிரதமராவார்.... பிரதமராவது உறுதி.... சிங்க நிகர் தலைவி.... சிங்க நடை... சிம்ம ராசி என்று பிரசாரத்திற்கு போகுமிடமெல்லாம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை போற்றிப் புகழ்ந்து வருகிறார் மதுரை ஆதினம்.
மதுரை ஆதீனம் என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் பழமையான மடத்தின் பீடாதிபதி.
1.500 வருட காலம் பழமையான இம்மடத்தைப் பின்பற்றுபவர்கள் கணிசமான அளவில் இருக்கிறார்கள். இவர் அதிமுகவிற்கு ஆதரவாக 40 தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்து வருகிறார்.
அரசியல்வாதிகளை விட மோசம்
போகும் இடமெல்லாம் அதிமுக கொள்கை பரப்பு செயலாளர்களை விடவும், அதிமுக பேச்சாளர்களை விடவும், உணர்ச்சி வசப்பட்டு பேசுவது... உடலை குலுக்குவது... அம்மா பெயரைச் சொன்னாலே பரவசப்படுவது என பல அலப்பறைகளை செய்து அதிர்ச்சியூட்டிவருகிறார்.
அம்மா சிங்கம்லே…
அம்மா கூட்டணி ஏன் கூட்டணி வைக்கலை? ஏன்னா? அம்மா சிங்கம்.. சிங்கம் எப்பவுமே சிங்கிளாத்தான் வரும். அதான் யாரோட தயவும் தேவையில்லைன்னு சிங்கிளா நிற்கிறாங்க.
சிங்க நிகர் தலைவி
அம்மா ராசி சிம்ம ராசி... நடை சிம்ம நடை... பார்வை சிம்மப் பார்வை... அந்த கம்பீரம் அவங்களைத் தவிர யாருக்கும் வராது.
அம்மா பிரதமராவார்
இந்தியாவின் பிரதமராக அம்மா வருவது உறுதி... 40 தொகுதிகளிலும் அம்மா ஜெயிப்பார். புரட்சித்தலைவி அம்மா வாழ்க... புரட்சித்தலைவி பிரதமராவது உறுதி ( மெய்சிலிர்க்க, பக்திப் பரவசத்தோடு இதை உச்சரிக்கிறார் ஆதினம்)
292 வது சன்னிதானம்
மதுரை ஆதீனம் 2,500 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. மதுரை ஆதீனத்தின் 292-வது சன்னிதானமான இருந்து வருகிறேன். லோக்சபா தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நான் பேசுகிறேன். ஏனென்றால் நானும் ஒரு வாக்காளர். நாட்டை காப்பதில் எனக்கும் கடமை உண்டு.
வாய்ப்புகளை பயன்படுத்தவில்லை
தமிழகத்தை சேர்ந்தவர்கள், உயரிய பதவியான குடியரசு தலைவர் பதவியில் இருந்துள்ளனர். ஆனால், பெருந்தலைவர் காமராஜர், மூப்பனாருக்கு பிரதமராகும் வாய்ப்பு வந்தது. அவர்கள் அதை சரியாக பயன்படுத்தவில்லை.
இந்தியா வல்லரசாகும்
தற்போது அம்மா பிரதமராகும் நேரம் வந்துள்ளது. அவர் துணிச்சலான ஆற்றல் மிக்க பெண்மணி. அவர் பிரதமரானால் இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து, நிச்சயம் வல்லரசாகும்.
அம்மா பாட்டு போடுப்பா
புரட்சித்தலைவியை பிரதமராக்க 40 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களுக்கே வாக்களியுங்கள்... என்று உணர்ச்சிகரமாக பேசி முடித்த ஆதினம். ரைட்... அம்மா பாட்டு நல்லதா ஒண்ணு போடுப்பா என்று மைக் செட் காரரிடம் சொல்லி உற்சாகமூட்டினார்.
இது சரியா?
பொதுவாக அரசியல்வாதிகள் எந்த பதவியை வகித்தாலும், அவர்கள் தாம் மடாதிபதிகளைச் சென்று பார்க்கவேண்டும். மடாதிபதிகள் சென்று பார்ப்பது கிடையாது. ஆனால், மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் பழமையான மடத்தின் பீடாதிபதியாக இருந்து கொண்டு, அரசியல்வாதிகளை சென்று பார்ப்பதும் இப்படி அரசியல்வாதிகளுக்கு நிகராக பேசி, போற்றி புகழ்வது சரியாகுமா என்று கேள்வி எழுப்புகின்றனர் ஆன்மீகவாதிகள்.