நாகர்கோவில்- பெங்களூர் தினசரி ரயிலை துவக்கி வைக்க வருவாரா கார்கே?
நாகர்கோவில் இருந்து பெங்களுருக்கு தினசரி ரயில் இயக்கப்பட வேண்டும் என பயணிகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் பயனாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இம்மார்க்கத்தில் வாராந்திர ரயில் இயக்கப்பட்டது. தொடர்ச்சியான பயணிகளின் கோரிக்கை பயனாக ரயில்வே துறை 2013ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் நாகர்கோவில்-பெங்களுருக்கு புதிய தினசரி ரயில் அறிவிக்கப்பட்டது.
பட்ஜெட் அறிவிப்பை தொடர்ந்து ஜூலை மாதம் வெளியிடப்பட்ட ரயில்வே கால அட்டவணையில் தினசரி ரயிலுக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. ஆனால ஓராண்டு ஆகியும் தினசரி ரயிலுக்கான இயக்கத்தை இழுத்தடுத்து வருவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். இரு மாதங்களுக்கு முன்பே ரயில் பெட்டிகள் தயாராகிவிட்டதாக கூறப்பட்டாலும் ரயிலை விட்டபாடில்லை. சில எம்.பி.க்களும் வரும் 2ம் தேதி ரயில்இயக்கப்பட்டுவிடும் என்று தெரிவித்தனர். இதனை அடுத்து ரயில்வே சங்கங்கள்புதிய ரயிலை வரவேற்கத் தயாராக இருந்தன.
இந்நிலையில் நேற்று ரயில் இயக்கத்திற்கான தேதி மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது. இதற்கிடையே தினசரி ரயிலை காரணம் காட்டி ஏற்கனவே இயங்கி வந்த வாராந்திர ரயிலை நிறுத்திவிட்டனர். இதனால் பெங்களுருக்கு செல்ல வாரம் ஒரு முறை இருந்த இந்த வாய்ப்பையும் இழந்து தவித்து வருகின்றனர்.
புதிய ரயில் இயக்கம் ரயில்வே அமைச்சரின் வருகைக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது. மத்திய அமைச்சர் மல்லிகார்ஜுன் கார்கே அனுமதி கிடைத்த பிறகே ரயில் இயக்கப்படும் என்று தெரிகிறது.
இது குறித்து பயணிகள் சிலர் கூறுகையில்,
மத்திய ரயில்வே அமைச்சருக்கு நேரம் இல்லாததால் புதிய ரயில் இயக்கம் தள்ளி கொண்டே போகிறது. பெங்களுரு தினசரி ரயிலுக்காக எவ்வளவு காலம் தான் காத்திருக்க வேண்டுமோ என்று தெரியவில்லை. தனியார் ஆம்னி வேனில் பயணிக்கலாம் என்றால் அவர்கள் டிக்கெட் விலையை கேட்டே தலை சுற்றுகிறது. மேலும் பேய்தனமாக ஓட்டி செல்வதால் அதில் பயணம் செய்ய பயமாகவும் இருக்கிறது. புதிய ரயில் விட்டால் தான் எங்கள் பிரச்சனை தீரும் என்றனர்.