நாங்குநேரி ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்களை நிறுத்த கோரி ரயில் மறியல் போராட்டம்!
நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களையும் நிறுத்தக்கோரி வியாபாரிகளும், பொதுமக்களும் இன்று ரயில் மறியல் போராட்டம், கடையடைப்பு போராட்டம் நடத்திவருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி முக்கியமான ரயில் நிறுத்தமாகும். ஏனெனில் திசையன்விளை, களக்காடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள மக்கள் நாங்குநேரி ரயில் நிலையத்தை நம்பி உள்ளனர். மேலும் நாங்குநேரி தாலுகா தலைநகரம் என்பதாலும், நீதிமன்றம் அமைந்துள்ளதாலும் வெளியூர்களில் இருந்து நாங்குநேரிக்கு போக்குவரத்து அதிகம் இருக்கும்.
ஆனால் பெங்களூர்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், மும்பை எக்ஸ்பிரஸ் உட்பட பெரும்பாலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாங்குநேரியில் நிற்பதில்லை. நாங்குநேரிக்கு வர வேண்டும் என்றால் 30 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நெல்லையிலேயே பயணிகள் இறங்க வேண்டும், அல்லது 20 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள வள்ளியூரில் இறங்கி வர வேண்டும். இதனால் நாங்குநேரி நகர மக்கள் மட்டுமின்றி, அந்த ரயில் நிலையத்தை நம்பியுள்ள 30 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் உள்ள பகுதி மக்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
இதையடுத்து ரயில்வே அமைச்சகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக இன்று நாங்குநேரி வியாபாரிகள் சங்கத்தினர் ரயில் மறிப்பு மற்றும் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்புவிடுத்திருந்தனர். இந்த போராட்டத்துக்கு அனைத்து வியாபாரிகளும் ஆதரவு அளித்தனர். காலை முதல் மாலை வரை கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, வியாபாரிகளும், பொதுமக்களும் கோவை எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் விரைந்து வந்து ரயில் மறியலில் ஈடுபட்ட 92 பேரை கைது செய்தனர். இதையடுத்து நாகர்கோவில்-நெல்லை-மதுரை மார்க்கத்தில் ரயில்கள் சுமார் 20 நிமிடம் காலதாமதமாக இயக்கப்பட்டன.