இளைஞர் காங். 58ம் ஆண்டு விழா... போலீசார், ‘நாசா’ மோதலால் பரபரப்பு!
புதுவை: முறையான அனுமதி பெறாமல் இளைஞர் காங்கிரஸின் 58ம் ஆண்டு விழா கொடியேற்றும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக கூறிய காவல் உதவி ஆய்வாளருடன் முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் புதுவையில் பரபரப்பு ஏற்பட்டது.
இளைஞர் காங்கிரசின் 58 ஆம் ஆண்டு விழா கொடியேற்று நிகழ்ச்சி, நேற்று புதுவை அபிஷேகப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக, முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி புதுவை வந்திருந்தார்.
கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு முன்னதாக அங்கு வந்த தவளக்குப்பம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தன செல்வம் மற்றும் போலீசார், அனுமதி பெறாமல் கட்சி கொடி ஏற்றக் கூடாது என்று கூறி காங்கிரஸ் கொடியினை, நிர்வாகிகளிடம் இருந்து பறித்ததாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த நாராயணசாமி, காவல் உதவி ஆய்வாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து இளைஞர் காங்கிரசார் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் நீண்ட நேரத்திற்கு பிறகு கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி அளித்தனர்.