ஒட்டுக் கேட்கிறாங்க, எனக்கு வேணாம்.... செல்போன்களைத் தூக்கிப் போட்டு உடைத்த நடராஜன்
தஞ்சாவூர்: எனது போனை முதல்வர் ஜெயலலிதா ஒட்டுக் கேட்கிறார். நான் என்ன செய்கிறேன், என்ன பேசுகிறேன் என்பதை ஒட்டுக் கேட்கிறார். எனக்கு இந்த செல்போனே வேண்டாம் என்று கூறி தன்னிடமிருந்த ஐந்து செல்போன்களையும் கீழே தூக்கிப் போட்டு உடைத்து விட்டார் எம்.நடராஜன்.
சசிகலா கணவரான நடராஜன் தஞ்சையில் நடந்த பொங்கல், கலை இலக்கிய விழாவில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது திடீரென அவர் ஆவேசமடைந்தார். அவர் பேசுகையில், நான் அரசியலுக்கு வர வேண்டும் என 10 ஆயிரம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். நான் என்ன செய்கிறேன். என்ன பேசுகிறேன் என்பதை அறிந்து கொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதா என்னுடைய பேச்சுகளை ஒட்டு கேட்கிறார்.
இதனால் இனி நான் மொபைல் போன்களை பயன்படுத்த மாட்டேன். இவை எனக்கு வேண்டாம் என்று கூறிய அவர் தன்னிடமிருந்து ஐந்து செல்போன்களையும் கீழே தூக்கி எறிந்தார்.
இதனால் நடராஜன் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தவர்கள் திடுக்கிட்டனர்.