பிப்ரவரி 3ம் தேதி முக்கிய முடிவை அறிவிக்கப் போகிறாராம் எம். நடராஜன்...!
தஞ்சாவூர்: சசிகலாவின் கணவர் எம்.நடராஜன், பிப்ரவரி 3ம் தேதி அரசியல் புகுவதா இல்லையா என்பது குறித்த தனது முக்கிய முடிவை அறிவிக்கப் போகிறாராம்.
சமீபத்தில் தஞ்சையில் நடந்த பொங்கல் விழாவின்போதுதான் இப்படி தெரிவித்தார் அவர்.
இனிமேலும் தான் பொறுப்பதற்கில்லை என்று ஆவேசமாக பேசிய அவர் தான் நேரடியாக அரசியலுக்குப் புகுவது குறித்த முடிவை பிப்ரவரி 3ம் தேதி அறிவிக்கப் போவதாக கூட்டத்தினரின் கைத்தட்டல்களுக்கு மத்தியில் அறிவித்தார்.
தமிழர் கலை இலக்கியத் திருவிழா
தஞ்சையில் பொங்கல் பண்டிகையையொட்டி நடராஜன் நடத்திய விழாதான் இந்த தமிழர் கலை இலக்கியத் திருவிழா.
அன்று வெண்கோட்டை... இன்று செங்கோட்டை
அவருக்கு தொண்டர்கள் தடபுடலாக பட்டாசு வெடித்து வரவேற்பு கொடுத்து அசத்தினர். குறிப்பாக அன்று நீ இருந்ததால்தான் வெண்கோட்டை, இன்று நீ இருந்தால்தான் செங்கோட்டை போன்ற வாசகங்கள் சிந்தனையைத் தூண்டும் வகையில் சிலிர்ப்பூட்டுவதாக இருந்தன.
தமிழ் உணர்வு இருப்பதால்தான்
கூட்டத்தில் நடராஜன் பேசுகையில், தமிழர்களின் கலையையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாகவே, 15 ஆண்டுகளுக்கு மேலாக நாம் இதை நடத்தி வருகிறோம். தஞ்சையில் மட்டுமல்ல... அனைத்து மாவட்டங்களிலும் பேசப்படுகிற நிகழ்ச்சியாக இது மாறி இருப்பதற்குக் காரணம், நம் தமிழ் உணர்வுதான்.
கலைஞரே ஆச்சரியப்பட்டார்
தன்னுடைய கட்சிக் கூட்டத்துக்கு வந்த கலைஞர்கூட இதைக் கேள்விப்பட்டு, அங்கே என்ன அப்படி நடைபெறுகிறது? என்று விசாரித்து, அதேபோன்று அவர்களும் சென்னை சங்கமம் நிகழ்ச்சியை நடத்தினார்கள். அப்போது ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், கலைஞரால் மூன்று ஆண்டுகள் மட்டும்தான் அந்த விழாவை நடத்த முடிந்தது. நாம் 15 ஆண்டுகளுக்கும் மேல் நடத்தி வருகிறோம். இதற்குக் காரணம் நம் தமிழ் உணர்வுதான்!
வங்கி திறப்பதுதான் ப.சிதம்பரத்தின் சாதனை
ஒரு நிதியமைச்சர் நமது நாட்டுக்குக் கிடைத்திருக்கிறார். அவர் ஐந்து ஆண்டுகளில் செய்த சாதனைகள் என்ன? அவர் ஏரியாவில் ஊருக்கு ஊர் வங்கிகளைத் திறந்திருக்கிறார். நான் ஒருமுறை அங்கே சென்றபோது, அங்குள்ள மக்களிடம் பேசினேன். அவர்களோ, 'நிதியமைச்சர் வங்கிகளாகத் திறக்கிறார். வங்கியில் போடுவதற்கு இங்குள்ள மக்களிடம் பணம் எங்கே இருக்கிறது?' என்று கேட்டார்கள். இதுதான் நிஜம். அவர் ஜெயித்ததே செல்லாத நிலையில், இன்று அமைச்சர் பதவியிலும் இருக்கிறார். அந்த மர்மத்தையும் நான் வெளியிடுவேன்.
யாருமே மீனவர்களை நினைப்பதே இல்லை
மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலை அனுபவித்து வருகிறார்கள். இதைப்பற்றி தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் யாராவது பேசுகிறார்களா? மீனவர்களை யாரோ என்றுதானே நினைக்கிறார்கள். விடுதலைப் புலிகள் இருக்கும்போது எங்களைத் தொட்டதே இல்லை என்று சொல்கிறார்கள் மீனவர்கள். ஆனால், தமிழக முதல்வரோ, என்னால் என்ன முடியும். மத்திய அரசுதானே செய்ய வேண்டும் என்கிறார்.
சிக்கட்டும்.. நசுக்குகிறேன்
ஈழத் தமிழர்களின் ஈகிகளுக்குக் கட்டப்பட்டுள்ளது முள்ளிவாய்க்கால் முற்றம். இந்தப் புகழ் இவருக்குப் போய்சேருவதா என்று சிலருக்கு வருத்தம். முற்றத்தை இடித்த அதிகாரிகளை எனக்குத் தெரியும். அவர்களை இந்தத் தமிழக அரசு தண்டிக்காமல் மமதையில் இருக்கிறது. அவர்கள் என் கையில் சிக்குவார்கள். நான் அப்போது நசுக்குவேன்.
பொறுமை இழந்தால்.. வெளியே வருவேன்
என் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. பொறுமை இழந்தால், நான் வெளியே வருவேன். நான் நேரடி அரசியலில் ஈடுபட வேண்டுமா... வேண்டாமா என்று நீங்களே சொல்லுங்கள்...
இளிச்சவாயர்களா...
வெளியில் இருந்து வந்தவர்களுக்கு நாம் இடம் கொடுத்து நாம் இல்லாமல் போய்விடக் கூடாது. நாங்கள் என்ன இளிச்சவாயர்களா? நான் எதிரிகளை அடையாளம் காட்டுவேன். அவர்களுக்கு நீங்கள் பாடம் புகட்ட வேண்டும். நான் நேரடி அரசியலுக்கு வரணுமா... வேண்டாமா என்பதற்கு இங்கே ஓட்டுப் பெட்டி வைத்துள்ளேன். அதில் ஓட்டுப் போட்டு, மக்களாகிய நீங்கள் உங்கள் முடிவைச் சொல்லுங்கள். நான் எனது முடிவை பிப்ரவரி மாதம் 3-ம் தேதி அண்ணா நினைவு நாளில் அறிவிக்கிறேன் என்றார் நடராஜன்.
அவரது முடிவு என்னவாக இருக்கும், யாரை வெளியில் இருந்து வந்தவர்கள் என்று நடராஜன் சொல்கிறார் என்பது தெரியவில்லை.