பாமக Vs ரங்கசாமி: புதுவையில் நடுநிலை வகிக்க பா.ஜ.க. முடிவு?
புதுச்சேரி: லோக்சபா தேர்தலில் புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பா.ம.க. வேட்பாளர்களில் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் 'நடுநிலை' வகிக்க பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் பாரதிய ஜனதா தலைமையில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. ஆகியவை கூட்டணி அமைத்து களத்தில் இறங்கியுள்ளன. ஆனால் புதுச்சேரியில் இந்த கூட்டணி சிதறிப் போயுள்ளது.
புதுச்சேரியில் பாரதிய ஜனதாவை ஆதரிக்கும் புதுவை என்.ஆர்.காங்கிரஸ், பா.ம.க. ஆகிய இரண்டுமே தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றன. இரண்டு கட்சிகளுமே மோடி படத்தை பயன்படுத்தவும் செய்கின்றனர்.
இதனால் அந்த கூட்டணியில் படு பயங்கர குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி தேர்தலில் யாரும் தன்னுடைய படத்தையோ, கட்சிப் பெயரையோ போடக் கூடாது என்று விஜயகாந்த் அறிவித்துவிட்டார். ஆனால் புதுவை பா.ம.க. வேட்பாளருக்கு ம.தி.மு.க. ஆதரவு தரும் என்று வைகோ அறிவித்திருக்கிறார்.
இந்த களேபர குழப்பத்துக்கு மத்தியில் பேசாமல் யாருக்கு ஆதரவு என தெரிவிக்காமல் அப்படியே நடுநிலைமை போல் காட்டிக் கொள்வதுதான் சரியாக இருக்கும் என்று கருதுகிறதாம் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் பாரதிய ஜனதா கட்சி.