மத்தியில் காங்கிரஸ், பாஜக அல்லாத ஆட்சி அமையும்: தா.பாண்டியன் நம்பிக்கை
தஞ்சை: மத்தியில் காங்கிரஸ், பாஜக அல்லாத ஆட்சி அமைய வாய்ப்புள்ளது. காலமும், சூழலும் அதற்கு ஏற்றார் போல் அமையும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் அதன் மாநில செயலாளர் தா.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வாக்குப்பதிவுக்கு முன்பு சட்டம் ஒழுங்கை காப்பாற்ற தேர்தல் ஆணையம் 144 தடை உத்தரவை கொண்டு வந்தது. இதை ஆளும் கட்சி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வசதியாக பயன்படுதிக் கொண்டது. இது போன்ற முறைகேடுகள் களையப்பட வேண்டும். இந்த பிரச்சனைக்கு முற்றிலும் தீர்வு காண பொறுப்புள்ள அரசியல் கட்சிகள் முன் வர வேண்டும்.
உலகில் 42 நாடுகளில் அமலில் உள்ள விகிதாச்சார தேர்தல் முறையை கொண்டு வருவது குறித்து சட்டத்திருத்தம் செய்ய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாடுபடும்.
தற்போது பெய்துள்ள மழை வெப்பத்தை மட்டுமே தணிக்கும் சக்தி கொண்டது. ஆனால் குடிநீர், விவசாயத்துக்கு போதுமானதாக இருக்காது. இப் பிரச்னை குறித்து அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யத் தவறிவிட்டது.
தேர்தலில் மத்தியில் ஆட்சி அமைக்க எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது. பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையே மோதலும், மதங்களுக்கு இடையே சர்ச்சைகளும் உருவாகும். நாட்டின் ஒற்றுமையும், வளர்ச்சியும் அழிந்து போகும். இடதுசாரி கூட்டணி மத்தியில் வகுப்புவாத ஆட்சி அமையாமல் தடுக்கும்.
எனவே மத்தியில் காங்கிரஸ், பாஜக அல்லாத ஆட்சி அமைய வாய்ப்புள்ளது. காலமும், சூழலும் அதற்கு ஏற்றார் போல் அமையும் என்றார்.