பேச்சாளை மீ்ன் சீசன் தொடங்கியதால் மீனவர்கள் உற்சாகம்
நெல்லை: நெல்லை மாவட்ட கடலோர பகுதிகளில் பேச்சாளை மீன் சீசன் தொடங்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சியுடன் கரை திரும்பி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் கூட்டபுளி, பெருமணல், இடிந்தகரை, கூத்தன்குழி, உவரி, கூட்டபனை, கூடுதாழை ஆகிய 7 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் அனைவரும் பைபர் படகு மூலம் மீன் பிடித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்ட கடல் பகுதியை பொறுத்தவரை ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இறால் மீன் சீசன் அதிகம் காணப்படும். தற்போது இறால் சீசன் முடிந்து விட்டது.
இந்த நிலையில் உவரி மீனவர்களுக்கு கடலுக்குள் சென்று வலை வீசியதில் பேச்சாளை மீன்கள் அதிக அளவில் சிக்குவதால் அவர்கள் மகிழ்ச்சியுடன் கரை திரும்பி வருகின்றனர். அனைவரும் பைபர் படகுகள் நிரம்பி வழியும் அளவுக்கு பேச்சாளை மீன்களுடன் திரும்புவதால் கரையில் இருப்பவர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த வகை மீன்கள் கோழி தீவனத்திற்காக அதிக அளவில் பயன்படுத்தப்படும். இந்த வகை மீன்கள் அரவை செய்யப்பட்டு கோழி தீவனத்திற்காக நாமக்கல் போன்ற இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இதனை பெறுவதற்காக கேரள வியாபாரிகள் பலர் கடலோர கிராமங்களில் முகாமி்ட்டு வருகின்றனர். இவர்கள் 55 கிலோ கொண்ட ஒரு பெட்டியை ரூ.600க்கு வாங்கி செல்கின்றனர்.
இது குறித்து மீனவர்கள் சிலர் கூறுகையில், பேச்சாளை மீன்கள் கோழி தீவனத்திற்காக அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் அரைத்து நாமக்கல் அனுப்புகின்றனர். இந்த சீசன் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நீடிக்கும் என்ற தெரிவித்தனர்.