திருட்டுப் போன 13 அரசு இலவச லேப்டாப்கள்... துப்பு கிடைக்காமல் திணறும் போலீசார்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் மாணவர்களுக்கு வழங்க வைத்திருந்த தமிழக அரசின் இலவச லேப்டாப்கள் திருட்டு போன விவகாரத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரை அடுத்த வெள்ளாளங்குழி அரசு மேல்நிலைப்பள்ளி இயற்பியல் ஆய்வகத்தில் மாணவர்களுக்கு கொடுப்பதற்காக 37 இலவச லேப்டாப்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், விடுமுறை தினமான நேற்று ஆய்வகத்தின் பூட்டை உடைத்து அதில் 13 லேப்டாப்களை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ.1.5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மாரியப்பன் வீரவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
திருட்டைத் தொடர்ந்து மீதமிருந்த 26 லேப்டாப்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. லேப்டாப் கிடைக்காத மாணவர்கள் தற்போது கல்லூரியில் படித்து வருகின்றனர். பல பள்ளிகளில் இன்னும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
புகாரின் பேரில் விசாரணையைத் தொடங்கிய போலீசார் சரியான துப்பு கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர். அனைத்து லேப்டாப்புகளையும் திருடாமல் 13ஐ மட்டும் மர்ம நபர்கள் திருடிச் சென்றதில் சதி ஏதும் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, விரைந்து திருடு போன லேப்டாப்களை மீட்டு தங்களுக்கு வழங்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.