ஆறு, குளத்தில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகள் - கடையநல்லூரில் தொற்று நோய் அபாயம்
நெல்லை: கடையநல்லூர் பகுதியில் உள்ள ஆறு, குளங்களில் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் அங்கு மறுபடியும் டெங்கு உள்பட பல நோய்கள் ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் அதிக அளவிலான விவசாயம் நடைபெறுவதால் அங்கு ஏராளமான குளங்கள், கால்வாய்கள் உள்ளன. கடையநல்லூர் நகரப்பகுதி வழியாக பாப்பான்குளம் கால்வாய், சீவலங்கால்வாய் உள்பட பல கால்வாய்கள் செல்கின்றன.
இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அதோடு நகர பகுதியில் உள்ள அட்டைகுளம், புதுக்குளம் உள்ளிட்ட குளங்களும் விவசாயத்திற்கு பயன்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடையநல்லூர் நகராட்சி பகுதியில் உள்ள குப்பைகள் இந்த கால்வாய்கள் மட்டுமின்றி அனைத்து நீர் நிலைகளிலும் கொட்டப்படுவதால் நீர்நிலைகள் மாசுபட்டு வருகிறது. அத்துடன் கடையநல்லூர் பகுதிகளில் தினந்தோறும் உணவுக்களுக்காக வெட்டப்படும் ஆடு, கோழி இறைச்சி கழிவுகளும் நீர்நிலைகளில் கொட்டப்படுகிறது. இது குறித்து நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்வதில்லை. இதனால், அப்பகுதியிலிருந்து கடுமையாக தூர்நாற்றம் வீசுவதாகவும், நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளோ கண்டு கொள்வதே இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஏற்கனவே இங்கு 2010ம் ஆண்டு ஏற்பட்ட சுகாதார சீர்கேட்டினால் கடுமையான தொற்று நோய் ஏற்பட்டு 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நூற்றுக்கும் மோலானோர் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நோய் தொற்று நெல்லை மாவட்டம் முழுவதும் பரவியதால் சுகாதார துறை அதிகாரிகள் விரைந்து வந்து தீவிர ஆய்வு செய்தனர். இதனால் ஓரளவுக்கு நோய் கட்டுபாட்டுக்குள் வந்தது.
இந்தநிலையில் மீண்டும் சுகாதாரம் கெட்டு வருவதால் மீண்டும் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாக இப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.