புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்
சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்துவருகிறது. சென்னையில் நேற்று இரவில் இருந்து அநேக இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் மழைநீர் தேங்கி வருகிறது. மழைநீர் தேங்கி வருவதால், ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை மட்டுமல்லாது அதன், சுற்றுப்புறங்களிலும் மழை பெய்து வருவதால், ஏற்கனவே தேங்கிய வெள்ளநீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம், கரூர், அருப்புக்கோட்டை, விழுப்புரம், திண்டுக்கல் மற்றும் புதுச்சேரியிலும் பலத்த மழை பெய்தது.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய அதிகாரி, இலங்கைக்கு அருகே, தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் இன்னும் இரண்டு நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை முதல் மிக அதிக கன மழை பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அவ்வப்போது இடியுடன் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தார். இந்த புதிய காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மணிமுத்தாறு பகுதியில் 9 செ.மீட்டரும் நாங்குநேரியில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.