பழனி: மீண்டும் தொடங்கியது ரோப்கார் சேவை - பக்தர்கள் மகிழ்ச்சி
முருகனின் ஆறுபடை வீடுகளில் முக்கியமானது பழனி. இந்த ஆலயத்திற்கு தமிழக பக்தர்கள் மட்டுமின்றி கேரள மக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
நாடெங்கிலும் இருந்து இலட்சக்கணக்கில் வந்து செல்லும் பக்தர்கள் வசதிக்காக பழநி மலைக்கோயிலில் ரோப்கார்கள் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ரோப்கார்கள் சேவை நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணி நடந்து வந்தது. சிலவாரங்களுக்கு முன் இப்பணிகள் முடிவடைந்ததால் பக்தர்களின் பயன்பாட்டிற்காக மீண்டும் ரோப்கார்கள் நேற்று முதல் இயக்கப்பட்டது.
3 நிமிடத்தில்...
பழநி வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து 3 நிமிடத்தில் மலைக்கோயிலுக்கு செல்லும் வகையில், 'ரோப்கார்' தினமும் காலை 7மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படுகிறது.
புதுப்பிப்பு...
பக்தர்களின் பயன் பாட்டிற்கு இயக்கப்படும் முன் மேல்தளம், கீழ்தளத்திலுள்ள உருளை, பல்சக்கரங்கள், 8 பெட்டிகள் புதுப்பிக்கப்பட்டன.
சோதனை ஓட்டம்...
கடந்த இரண்டு நாட்களாக, ஒவ்வொரு பெட்டியிலும் தலா 300 கிலோ அளவுள்ள எடைக் கற்களை வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்து பெட்டிகளும் உறுதியாக இருப்பதாக பாதுகாப்பு கமிட்டியினர் சான்றிதழ் வழங்கினர்.
சிறப்பு பூஜை...
இதையடுத்து 60 நாட்களுக்கு பின், நேற்று காலையில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு 'ரோப்கார்' இயக்கப்பட்டது. இதனால், மக்கள் மகிழ்ச்சியோடு ரோப்கார் மூலமாக தங்கள் பயணத்தை மேற்கொண்டனர்.