'நான் உங்களுக்கு உதவலாமா?'... சென்னை ஜி.எச்.களில் கனிவாகப் பேசி வழிகாட்டும் ஊழியர்கள்!
சென்னை: சென்னை அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உதவும் வகையில், ‘நான் உங்களுக்கு உதவலாமா?' என்ற புதிய மாதிரித் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
திருப்பதியில் மொட்டைத் தலையனைத் தேடுவது போலத் தான், பெரிய அரசு மருத்துவமனைகளில் ஒவ்வொரு வார்டையும் தேடுவது.
எனவே, அரசு மருத்துவமனைகளில் பரிசோதனைக்காகவும் வெவ்வேறு துறை டாக்டர்களை சந்திக்கவும் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்லும் புறநோயாளிகளுக்கு வழிகாட்டுவதற்கென பிரத்தியேகப் பணியாளர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர்.
புற நோயாளிகள்...
அரசு மருத்துவமனைகளில் புற நோயாளிகளாக செல்பவர்கள் பரிசோதனை மற்றும் கருத்து கேட்புக்காக பல்வேறு துறைகளுக்கு அனுப்பிவைக்கப்படுவது வழக்கம். இதற்காக மருத்துவமனை வளாகத்தில் ஒரு கட்டிடத்தில் இருந்து இன்னொரு கட்டிடத்துக்கும் வெவ்வேறு மாடிகளுக்கும் செல்லவேண்டியிருக்கும்.
தீர்வு...
அனைத்து அறைகளும் பெரும்பாலும் ஒரே மாதிரி இருக்கும் மருத்துவமனையில் திக்குத் தெரியாமல் நோயாளிகள் சுற்றுவது பரிதாபமாக இருக்கும்.இப்பிரச்சினைக்குத் தீர்வளிக்கும் வகையில் தற்போது மாதிரித் திட்டம் ஒன்று சென்னைராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
நான் உங்களுக்கு உதவலாமா?
அத்திட்டத்திற்கு, ‘நான் உங்களுக்கு உதவலாமா? ( May I help you ) எனப் பெயரிடப் பட்டுள்ளது. இதற்கென பிரத்யேகமாக 12 பணியாளர்கள் மற்றும் 3 மேற்பார்வையாளர்கள் தற்போது பணியில் அமர்த்தப் பட்டுள்ளனர். இவர்களுக்கு ஆரஞ்சு வண்ண ஆடை யூனிபார்ம் அளிக்கப் பட்டுள்ளது.
வழிகாட்டி...
தனியார் மருத்துவமனைகளில் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் உள்ளது போல், இப்பணியில் உள்ள பெண்கள், நோயாளிகளிடம் கனிவாகப் பேசி ‘உங்களுக்கு என்ன உதவி வேண் டும். பரிசோதனைக்காக ஏதாவது துறைக்கு செல்ல வேண்டுமா. நான் உங்களுக்கு உதவலாமா' என்று கூறி வழிகாட்டி வருகிறார்கள்.
வரவேற்பு...
இப்புதிய அணுகுமுறை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உதவிகரமாக இருப்பதால், அறிமுகப் படுத்தப்பட்ட சில தினங்களிலேயே இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
10 ஆயிரம் புறநோயாளிகள்...
இது தொடர்பாக மருத் துவ அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் 32 உயர் சிறப்பு துறை கள் உள்ளன. இதன் துணைப் பிரிவுகளும் உள்ளன. 2 கட்டிடங் களில் பல அடுக்குகள் உள்ளன. நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புற நோயாளிகள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துசெல்கின்றனர்.
குறை கூற முடியாது...
பொதுவாக, இவர்கள் மருத்துவ ஊழியர்களிடம்தான் வழி கேட்பார்கள். பலர் மனிதாபிமானத் துடன் வழி காட்டுவார்கள். சிலர் நோயாளிகளுக்கு உதவாமல் சென்றுவிடுவார்கள். அது அவர்களது பணி இல்லை என்பதால், அவர்களை குறை கூறவும் முடி யாது.
மாதிரித் திட்டம்...
இந்த பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் ‘நான் உங்களுக்கு உதவலாமா' என்ற மாதிரித் திட்டம் இங்கு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இந்த பணியாளர்களது வேலையே நோயாளிகளுக்கு வழிகாட்டுவது தான்.
பயிற்சி பெற்ற ஊழியர்கள்...
இதற்காக அயல்பணி முறையில் தொகுப்பூதியத்தில் 12 வழிகாட்டிகள், 3 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நோயாளிகளிடம் கனிவாகப் பேசி வழிகாட்டுவது குறித்து இவர்களுக்கு 2 வாரப் பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது.
விரிவு படுத்தப்படும்...
இவர்கள் தினமும் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நோயாளிகளுக்கு வழிகாட்டுவார்கள். இதில் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து கூடுதல் வழிகாட்டிகள் நியமிக்கப் படுவார்கள். மற்ற மருத்துவ மனைகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
உதவிகரமாக உள்ளது...
இதுபற்றி நோயாளி ஒருவர் கூறும்போது, ‘‘ வழிகாட்டுவதற் கென்றே தனி பணியாளர்களை நியமித்திருப்பது பாராட்டுக்குரியது. இடம் தெரியாமல் தவிப்பவர்களை அந்த பணியாளர்கள் அழைத்துச் சென்று உரிய இடத்திலேயே விடுகின்றனர்'' என்றார்.