சென்னை-கன்னியாகுமரி இடையே புதிய ரயில் பாதை: சதானந்தகவுடா தகவல்
சென்னை: சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக கன்னியாகுமரிக்கு புதிய ரயில் பாதை அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்தார்.
மாநிலங்களவையில் ரயில்வே பட்ஜெட் மீதான விவாத்தின்போது நேற்று பேசிய அவர், ரயில்வே திட்டங்கள் குறித்து எம்.பி.க்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் பெறப்பட்டன. இந்த கோரிக்கைகள் அனைத்தும் அடுத்த 7 மாதங்களில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் நிறைவேற்றப்படும்.
பாதுகாப்புக்கு முன்னுரிமை
ஏற்கனவே தொடங்கப்பட்ட பணிகளை நிறைவு செய்யவும், பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்தும், ரயில்வே பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு கடற்கரை பாதை
தமிழகத்தில் புதிய பாதை அமைப்பது குறித்து எம்.பி.க்களிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது. அதன்படி சென்னையில் இருந்து புதுச்சேரி, ராமநாதபுரம், திருச்செந்தூர், குட்டம், கூடங்குளம் வழியாக கன்னியாகுமரிக்கு புதிய ரயில் பாதை அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.
கும்பமேளா
கும்பமேளா விழாவை கருத்தில் கொண்டு, கும்பகோணம்- விருத்தாசலம் இடையே ரயில் பாதை அமைப்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும். இவ்வாறு சதானந்தகவுடா தெரிவித்தார்.
தண்டவாளமே இல்லை
கிழக்கு கடற்கரை பகுதியில் சென்னை, புதுச்சேரி, கடலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட முக்கிய நகரங்கள் அமைந்துள்ளன. தூத்துக்குடி முதல் கன்னியாகுமரிக்கு ரயில் பாதை கிடையாது.
ஊர்களின் சிறப்பு
இவ்விரு நகரங்களுக்கு நடுவே, பிரியாணிக்கு பெயர்போன காயல்பட்டிணம், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான கோவில் நகரம் திருச்செந்தூர், கருப்புக்கட்டி ஏற்றுமதிக்கு பெயர்போன உடன்குடி, முந்திரி விளைச்சலுக்கு பெயர் பெற்ற குட்டம், வர்த்தக டவுன் திசையன்விளை, அணுமின் நிலையம் அமைந்துள்ள கூடங்குளம் போன்ற முக்கிய பகுதிகள் உள்ளன. புதிய ரயில் பாதை அமைந்தால் இப்பகுதி மக்களும், வர்த்தகர்களும் மிகுந்த பயன்பெறுவர்.