எம்.ஜி.ஆரின் வெற்றியை எந்த நடிகரும் நினைத்துப் பார்க்க முடியாது!- நடிகர் சத்யராஜ்
சென்னை: புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் வெற்றியை எந்த நடிகரும் நினைத்துப் பார்க்க முடியாது என்று நடிகர் சத்யராஜ் கூறினார்.
கடந்த 1965-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அண்மையில் மறுவெளியீடு செய்யப்பட்டது.
இந்தப் படத்தின் 175-ஆவது நாள் வெற்றி விழா சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. சரத்குமார் எம்எல்ஏ தலைமை தாங்கினார்.
சத்யராஜ்
விழாவில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ் பேசியது:
எம்.ஜி.ஆர். படத்தை ரசித்தவர்கள், வேறு எந்த நடிகரின் படத்தையும் ரசிக்க முடியாது. எந்த ஒரு நடிகரின் படத்தைப் பார்த்து விட்டு வந்தாலும் எம்.ஜி.ஆர். படத்தைப் பார்த்த பிறகே உறங்கச் செல்வேன்.
'மர்மயோகி', "பெற்றால்தான் பிள்ளையா', "ஆயிரத்தில் ஒருவன்', "எங்க வீட்டுப் பிள்ளை' என ஒவ்வொரு படத்திலும் தன் இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர் எம்.ஜி.ஆர்.
வள்ளல்
எம்.ஜி.ஆர். ஒருவர்தான் விவசாயிகளின் நலன், மீனவர்களின் துயர்துடைத்தல் என ஒவ்வொரு பிரச்னையையும் தனது திரைப்படங்களில் பேசியிருப்பார். அதேபோல இலங்கைத் தமிழர்களுக்கு அள்ளிக் கொடுத்த வள்ளல் எம்.ஜி.ஆர். ஒருவேளை இன்று எம்.ஜி.ஆர். இருந்திருந்தால் தனி ஈழம் அமைந்திருக்கும்.
கற்பனை கூட பண்ண முடியாது
ஜாதி மத வேறுபாடு, ஏழை எளிய மக்கள் இல்லாத சமூகம் உருவாகப் பாடுபட்டவர் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர். அடைந்த வெற்றியை எந்த நடிகரும் நினைத்துப் பார்க்க முடியாது.
வருங்கால முதல்வர் என்று எந்த ஒரு நடிகர் கூறிக்கொண்டாலும் அதைப் பார்த்து எனக்குச் சிரிப்புதான் வரும்," என்றார் சத்யராஜ்.
மனிதக் கடவுள் எம்.ஜி.ஆர். - சரத்குமார்
'அழிக்க முடியாத புகழை அடைந்தவர் எம்.ஜி.ஆர். ஒருவரே. பலமுறை பார்த்திருந்தாலும் ஒரே ஒரு முறைதான் நேரடியாகப் பார்த்தேன். அந்த நாள் என் வாழ்நாளில் மறக்க முடியாதது. மனிதன் கடவுளாக முடியும் என்பதற்கு உதாரணம் எம்.ஜி.ஆர்.,' என்றார் சரத்குமார்.
விருது
விழாவில் எம்.ஜி.ஆரின் உடை அலங்கார நிபுணர் முத்து, இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன், பின்னணிப் பாடகி சுசீலா, வசனகர்த்தா ஆர்.கே.சண்முகம், நடிகை ராஜஸ்ரீ உள்ளிட்ட 'ஆயிரத்தில் ஒருவன்' படக்கு ழுவினரோடு, நடிகர்கள் ராஜ்கிரண், விவேக், இயக்குநர்கள் பி.வாசு, விக்ரமன், 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்பட டிஜிட்டல் வெளியீட்டின் தயாரிப்பாளர் சாந்தி சொக்கலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் படக் குழுவினருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.