நீலகிரி பாஜக மனுக்கள் தள்ளுபடி.. 'விலைக்கு வாங்கியதா' அதிமுக? கூட்டணிக் கட்சிகள் கொந்தளிப்பு!!
உதகமண்டலம்: நீலகிரி லோக்சபா தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ மற்றும் மாற்று வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் தள்ளுபடியில் 'சதி' இருப்பதாகக் கூறி அதன் கூட்டணிக் கட்சிகளான பாமக, மதிமுக, தேமுதிகவினர் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக வேட்பாளரை அதிமுக பேரம் பேசி விலைக்கு வாங்கிவிட்டதாகவும் கூட்டணிக் கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி லோக்சபா தொகுதியில் தேசிய ஜனநாய கட்சி கூட்டணி சார்பில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த குருமூர்த்தி போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். நேற்று நடைபெற்ற வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது பாஜக வேட்பாளர் குருமூர்த்தியின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதேபோன்று மாற்று வேட்பாளரின் வேட்புமனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இவர்கள்தான் வேட்பாளர்கள் என்பதற்கான அதிகாரப்பூர்வ கடிதம் கோவையில் இருந்து கொண்டுவரப்படுவதில் தாமதம் ஏற்பட்டதாலேயே இப்படி நிகழ்ந்துவிட்டது என்று பாரதிய ஜனதாவினர் விளக்கம் அளித்து வருகின்றனர். ஆனால் இதில் சூழ்ச்சி இருப்பதாகவும் அதிமுகவினர் பேரம் பேசி பாஜகவினரை விலைக்கு வாங்கிவிட்டனர் என்றும் குற்றம்சாட்டி பாஜக அலுவலகம் மீது அதன் கூட்டணிக் கட்சியான பா.ம.க.வினர் தாக்குதல் நடத்தினர்.
பாரதிய ஜனதா கட்சியினர் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட செய்தி அறிந்த பா.ம.க.வினர், நீலகிரி பாரதிய ஜனதா அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர். இதைதொடர்ந்து அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் தங்களுடைய வீடுகளுக்கு சென்று கதவை பூட்டிக் கொண்டனர்.
இதுகுறித்து பா.ம.க. மாநில துணைபொதுச்செயலாளர் பத்மநாபன் கூறுகையில், தேசிய ஜனநாயக கட்சி கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக சார்பில் குருமூர்த்தி நீலகிரி தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர் தொடக்கம் முதல் தேர்தல் பிரசாரத்திற்கு சரியாக ஒத்துழைப்பு தரவில்லை. குருமூர்த்தி ஏற்கனவே சட்டமன்ற மற்றும் லோக்சபா தொகுதியில் போட்டியிட வேட்பு மனுக்களை தாக்கல் செய்து உள்ளார். எனவே இவர் வேண்டும் என்றே வேட்புமனுவில் தவறு செய்து உள்ளதாக கருதுகிறோம். வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதில் சூழ்ச்சி உள்ளதாக கருதுகிறோம் என்றார்.
இதனிடையே கூடலூர் பழைய பேருந்து நிலையில் நிலையத்தில் பாஜக பிரசார அணி செயலாளர் கணேசன் தலைமையில் மகளிர் அணி மாநில பொதுக்குழு உறுப்பினர் நளினி, இந்து முன்னணி ஆனந்த், விசுவ இந்து பரிஷத்தை சேர்ந்த பாஸ்கரன், அனந்த சயனம், தே.மு.தி.க. தலைமை கழக பேச்சளார் முஜ்பூர் ரகுமான், நகர அவை தலைவர் சவுந்தர், ம.தி.மு.க. முபாரக், செல்வன் உள்பட கூட்டணி கட்சியினர் பா.ஜ.க. வேட்பாளர் குருமூர்த்தியை கண்டித்து அவருடைய கொடும்பாவியை எரிக்க முயன்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
விலைக்கு வாங்கியது அதிமுக?
மேலும் நீலகிரி தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவை திமுக வேட்பாளராக களம் இறக்கியுள்ளது. அத்தொகுதியில் அவரை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அதிமுகவினர் பாஜக வேட்பாளர்களை பேரம் பேசி விலைக்கு வாங்கியதாக கூறப்படுகிறது.
தற்போது பாரதிய ஜனதா போட்டியிடாததால் ராசாவுக்கான எதிர்ப்பு வாக்குகள் அதிமுகவுக்கு அதிகம் செல்லும் வாய்ப்புகள் உருவாகிவிட்டது. இதனால் திமுகவின் ராசாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை உணர்ந்தே அதிமுக திட்டமிட்டு காய் நகர்த்திவிட்டதாகவும் பாஜக வேட்பாளர்கள் இதற்கு உடந்தையாகிவிட்டனர் என்றும் உள்ளூர் பாஜக பிரமுகர்களும் அதன் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் குமுறுகின்றனர்.
இதனால் நீலகிரி தொகுதியில் திமுக- அதிமுக இடையே கடும் போட்டி உருவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.