திரும்ப திமுகவில் சேர மாட்டேன்... கருணாநிதியையும் சந்திக்க மாட்டேன் : அழகிரி அதிரடி!
மதுரை: மீண்டும் திமுகவுடன் சமரசம் செய்ய வாய்ப்பில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப் பட்டார் முன்னாள் மத்திய அமைச்சரான அழகிரி. அதனைத் தொடர்ந்து ஸ்டாலின் மேற்பார்வையில் லோக்சபாத் தேர்தலைச் சந்தித்த திமுக தோல்வியைத் தழுவியது.
தோல்வி எதிரொலி மற்றும் சில உட்கட்சி விவகாரங்கள் தொடர்பாக தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி மீண்டும் கட்சியில் சேரலாம் என தகவல்கள் வெளியானது. இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அழகிரி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது :-
ஒரே தலைவர்...
தமிழர்கள், தி.மு.க.வினர் அனைவரும் தலைவராக கருணாநிதியை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். நானும் இதைத்தான் ஆரம்பத்தில் இருந்தே கூறிவருகிறேன்.
ஸ்டாலினுக்குத் தகுதியில்லை...
கொள்கை பிடிப்புள்ள அனைவரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் தலைமையைத்தான் ஏற்றுக் கொள்வார்கள். ஸ்டாலின் தலைமையை ஏற்க மாட்டார்கள். தலைவர் ஆவதற்கு ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது.
உட்கட்சித் தேர்தல் முறைகேடு...
தி.மு.க.வில் நடைபெறும் உள்கட்சி தேர்தல் முறையாக நடைபெறவில்லை. கட்சியில் இல்லாதவர்களையும் உறுப்பினர்களாக சேர்த்து தேர்தல் நடத்துகிறார்கள். இதை நான் ஆதாரத்துடன் கொடுக்க தயாராக இருக்கிறேன்.
நிறைவேறாத கோரிக்கைகள்...
நெல்லை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் உள்கட்சி தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளன. என்னுடைய கோரிக்கைகள் எதுவுமே நிறைவேறவில்லை.
தலைவரை சந்திக்கவில்லை...
தி.மு.க. தலைவர் கருணாநிதியை நான் சந்திக்க தேவை இல்லை. சந்திக்க மாட்டேன்.
சமரசமில்லை...
நான் தி.மு.க.வில் சமரசமாகி விட்டதாக சிலர் கூறுவது உண்மை இல்லை. இதுபோன்று சொன்னதால் சமரசம் ஏற்பட்டுவிடாது.
பயமில்லை... பாதிப்புத் தான்
நான் கட்சியில் இல்லாததால் உண்மையான கட்சிக்காரர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தான் உண்மை. மற்றபடி நான் கட்சியில் சேரலாம் என்று வந்த செய்தியால் கட்சி நிர்வாகிகள் யாரும் பயப்படவில்லை' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.