எனக்கு உடல்நலக் குறைவு இல்லை- நலமாக இருக்கிறேன்: விஜயகாந்த்
சென்னை: தனக்கு உடல்நலக் குறைவு எதுவும் இல்லை.. நன்றாக இருக்கிறேன் என்று 'கைத்தாங்கலாக' அழைத்துவரப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று காலை 9 மணியளவில் கட்சி அலுவலகத்திற்கு விஜயகாந்த் வந்தார். அவரை பார்த்தசாரதி எம்.எல்.ஏ., சில அடி துாரத்துக்கு கைத்தாங்கலாக அழைத்து சென்றார்.
அதன் பின் நேரடியாக கொடி கம்பம் அருகே சென்ற விஜயகாந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பள்ளிகளில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்த கட்சியினரின் குழந்தைகளுக்கு விஜயகாந்த் இனிப்பு வழங்கினார்.
அதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. கட்சி அலுவலகத்திற்கு வெளியே, நாற்காலி போட்டு அமர்ந்த விஜயகாந்த், சில நிமிடங்கள் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது, பலரும், என் உடல் நலம் குறித்து விசாரித்தீர்கள். எனக்கு ஒன்றும் இல்லை; நான் நலமாக இருக்கிறேன். இந்த சுதந்திர நாளில், கட்சிப் பணியை முழுமூச்சாக மேற்கொள்ள தொண்டர்கள், நிர்வாகிகள் உறுதி ஏற்க வேண்டும்.
அப்போது தான், 2016ம் ஆண்டு கோட்டையில் நாம் கொடி ஏற்ற முடியும் என்றார்.