மோடி அலை வீசினால் அவர் ஏன் நடிகர்களை தேடி அலைகிறார்?: கி.வீரமணி
கும்பகோணம்: மோடி அலை மோடி அலை என கூறுகின்றனர். அப்படி ஒரு அலை வீசினால் அவர் ஏன் நடிகர்களின் ஆதரவைத் தேடி அலைகிறார் என்று திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
கும்பகோணத்தில் நேற்று இரவு தி.மு.க. கூட்டணியில் உள்ள மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர்அலியை ஆதரித்து பிரச்சார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசியபோது, கூறியதாவது:
நடைபெறவுள்ள தேர்தலுக்கும் இதுவரை நடந்த தேர்தலுக்கும் அதிக வேறுபாடு உள்ளது. தி.மு.க. தலைமையில் அமைந்துள்ளது மகத்தான, மக்கள் கூட்டணியாகும். ஆனால் எதிரணியினர் அமைத்துள்ள கூட்டணி குறித்து நாங்கள் பொதுமக்களிடம் எடுத்து சொல்ல வேண்டிய கவலையில் உள்ளோம்.
மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க கூடிய கூட்டணி தான் ஜனநாயக முற்போக்கு கூட்டணியாகும். இதில் அனைத்து சமுதாயத்திற்கும் இடமுண்டு. சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோருக்கும் இடமளித்து தேர்தல் களத்தினை தலைவர் கருணாநிதி கண்டு வருகிறார். இது ஒரு சமூக கூட்டணி, கொள்கை கூட்டணியாகும், ஆனால் எதிரணியில் வெளியே ஒரு பேச்சு, உள்ளே ஒரு ஏற்பாடு நடக்கிறது.
மோடி வித்தை
புதிய வாக்காளர்களுக்கு மோடி வித்தை பற்றி தெரியாது. ஆனால் வயதானவர்களுக்கு மோடி வித்தை பற்றி நன்றாக தெரியும். 1992ல் பாபர் மசூதி இடிப்பு, 2002 குஜராத்தில் சிறுபான்மையினத்தை அழித்ததை உலக அறிஞர்கள் எல்லாம் கண்டித்தார்கள்.
பல கோடி செலவு
இந்தோனேசியாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கிறார்கள். அவர்களை ஒழிக்க பா.ஜ.க. முடிவெடுத்துள்ளது. இந்தியாவில் பன்மொழி, கலாச்சாரத்தை ஒழிக்க இவை தீர்மானித்துள்ளது. பன்னாட்டு கம்பெனிகள் எல்லாம் பல கோடி செலவு செய்து மோடியை முன்னிறுத்தி வருகின்றனர்.
மோடி அலை இல்லையே
மோடி அலை மோடி அலை என கூறுகின்றனர். அப்படி ஒரு அலை வீசினால் அவர் ஏன் இந்தியா முழுவதும் அலைந்து கொண்டிருக்கிறார். ஒரு நாட்டின் பிரதமர் வேட்பாளர் என்பவர் அவருடைய இடத்தில் அல்லவா இருக்க வேண்டும். இப்படி அலைய கூடாது.
நடிகர்களைத் தேடி
அதே போல் பிரதமர் வேட்பாளர் என்பவர் தற்போது நடிகர்களை தேடி அலைந்து கொண்டிருக்கிறார். இந்த நிலை வெட்ககேடானது. பா.ஜ.க. தலைமையில் உள்ள கூட்டணி தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள கூட்டணியாக உள்ளது''என்று தெரிவித்தார்.
நல்லக்கண்ணு சாடல்
இதேபோல கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு, தேர்தல் நடக்கும் நேரத்தில், மோடி தமிழகத்துக்கு வேட்டி சட்டையுடன் வருவதும், நடிகர்களை சந்திப்பதும் ஏதோ நாடகம் மாதிரி இருக்கிறது என்று கூறியுள்ளார்.
திசை திருப்பும் வேலை
தேர்தலுக்காகவே நடைபெறும் இப்படிபட்ட சந்திப்புகள் மக்களை திசை திருப்பும் வேலை என்று கூறிய அவர், ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும், மதச்சார்பற்ற கொள்கை வெற்றி பெற வேண்டும், ஊழலும் உலக மயமும் இணைந்ததால் இந்திய பொருளாதாரமே சீர்குலைந்து விட்டது என்று கூறினார்.
பாஜக - காங்கிரஸ்
அதே பொருளாதாரக் கொள்கையைத்தான் பாஜகவும் பின்பற்றுகிறது. கூடுதலாக ஆர்எஸ்எஸ் கொள்கை களையும் நிறைவேற்றத் துடிக்கிறது. இந்தக் கட்சியையும் அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆபத்தான அரசியல்
இந்தியாவின் பிரதமர் வேட்பாளருக்கு இவ்வளவு அதிகமான செலவு யாரும் செய்தது இல்லை. இதற்கு பின்னால் கார்பரேட் நிறுவனங்களின் முதலாளிகள் உள்ளனர். இது ஆபத்தான அரசியல்'' என்றார்.