"இவருக்குப் பதில் இனி இவர்"… டிவி 'சீரியல்' பாணியில் பதிலளித்த விஜயகாந்த்!!
சேலம்: மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆசையில்லை எனத் தெரிவித்துள்ளார் பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உங்களுடன் நான் என்ற நிகழ்ச்சி மூலம் கட்சி தொண்டர்களை சந்தித்து வருகிறார். நேற்றைய நிகழ்ச்சி சேலத்தில் ஐந்து ரோடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.
விஜயகாந்த் மண்டபத்துக்குள் நுழைந்ததும் அதன் நுழைவாயில் கதவுகள் பூட்டப்பட்டன. அதனைத் தொடர்ந்து தொண்டர்கள் கேட்ட கேள்விக்கு விஜயகாந்த் பதில் அளித்தார்.
நேற்றைய நிகழ்ச்சியில், சேலம் மாநகர் மாவட்டம், கிழக்கு, மேற்கு மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் போது ஒரு தொண்டர் விஜயகாந்திடம் மீண்டும் சினிமாவில் நடிப்பீர்களா என வினா எழுப்பினார். அதற்கு விஜயகாந்த் அளித்த பதிலாவது :-
உடல்நலமில்லை...
உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் நீண்ட நேரம் பேச முடியாது. இருப்பினும் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் கூறுகிறேன்.
சினிமா வாரிசு...
சினிமாவில் நடித்து 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இனிமேல் சினமாவில் நடிக்க ஆசை இல்லை. எனக்கு பதில் எனது மகன் சினிமாவில் நடிக்கிறார்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புகைப்படம்...
கேள்வி பதில் நிகழ்ச்சிக்குப் பின்னர், தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்துடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் விஜயகாந்த்.
சட்டசபைத் தேர்தல்...
அப்போது 2016-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் சிறப்பான வெற்றி பெற கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் இப்போதே தீவிரமாக பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினார் விஜயகாந்த்.
சுற்றுப்பயணம்...
இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது :-
நான் தொண்டர்களை சந்திக்க ஆசைப்பட்டேன். அதற்காக ஒவ்வொரு மாவட்டமும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன்.
அடமானம்...
தே.மு.தி.க.வை அடமானம் வைத்து விடுவேன் என்று சிலர் கூறுகிறார்கள். கட்சியில் உள்ள ஒரு தொண்டனை கூட அடமானம் வைக்க மாட்டேன்.
புதிய உறுப்பினர்கள்...
2016-ல் தே.மு.தி.க. மாபெரும் சக்தியாக விளங்கும். ஒவ்வொரு ஒன்றியத்திலும் மாதந்தோறும் 1000 புதிய உறுப்பினர்களை சேர்த்து கட்சியை வலுப்படுத்த வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.