தமிழகத்தில் துணிவோடு கேள்வி கேட்கும் ஆள் நான் மட்டுமே... ராமதாஸ் பெருமிதம்
திருப்போரூர்: 2016ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் திமுக- அதிமுக கட்சிகளுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அதேபோல், தமிழகத்தில் ஆளும் கட்சிகளை எதிர்த்து துணிவோடு கேள்வி கேட்கும் ஒரே நபரும் நான் தான் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மத்திய மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் திருக்கழுக்குன்றத்தில் நடைபெற்றது. இதில் பா.ம.க நிறுவனர் டாக்டர். ராமதாஸ் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மாற்று சக்தி...
தமிழகத்தை தி.மு.க- அ.தி.மு.க. கட்சிகள் 41 வருடம் தொடர்ந்து ஆண்டு வருகிறது. இதற்கு மாற்று சக்தி வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். அந்த மாற்று சக்தி பா.ம.க. என மக்களிடம் எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் உள்ளது.
திமுக - அதிமுக ஆட்சி...
மதுவை ஒழிக்க எந்த மகன் வரப்போகிறான் என்று பெண்கள் எதிர்பார்க்கின்றனர். தி.மு.க- அ.தி.மு.க. மாறி மாறி மதுக்கடைகளை அதிகம் திறந்து வருமானத்தை பெருக்கியுள்ளது.
முதல் கையெழுத்து...
நான் முதலமைச்சராக வந்தால் போடும் முதல் கையெழுத்து மதுவை ஒழிப்பதுதான். தேர்தல் நேரத்தில் பணத்தை வாங்கிக் கொண்டு ஓட்டு போடுகிறார்கள் இலவசத்தை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள்.
சாராயத்தை ஒழிப்போம்...
நமது கட்சியினர் ஒவ்வொரு வீடாக சென்று சாராயத்தை பா.ம.க. தான் ஒழிக்கும் என பெண்களிடம் சத்தியம் செய்யுங்கள். குடிகாரன் கூட மதுவை ஒழிக்க வேண்டும் என விரும்புகிறான். மதுக்கடைகள் இருப்பதால் தான் குடிப்பதாக தெரிவிக்கிறான்.
துணிவான ஆள்...
தமிழகத்தில் லஞ்சம் பெருகிவிட்டது. காற்றாலையை நம்பிதான் இந்த அரசாங்கம் இயங்கி வருகிறது. இந்த ஆட்சியில் புதியதாக ஒரு யூனிட் கூட மின்உற்பத்தி செய்யப்படவில்லை. தமிழகத்தில் துணிவோடு கேள்விகேட்கக்கூடிய ஆள் நான் மட்டுமே. மற்றவர்கள் பயப்படுகிறார்கள். எத்தனை அவதூறு வழக்குகள் போட்டாலும் அதனை சந்திப்பேன்.
பாமக அவதாரம்...
இனிவரும் காலங்களில் அ.தி.மு.க-தி.மு.க.வுடன் கூட்டணி கிடையாது. இருகட்சிகளையும் ஒழிக்க காங்., பாஜக, கம்யூ. உள்ளிட்ட எந்த கட்சியாலும் முடியாது. இரு கட்சிகளையும் ஒழிக்கின்ற அவதாரத்தை பா.ம.க. எடுத்துள்ளது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
விழாவில் பங்கேற்றவர்கள்...
கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயலாளர் வாசு, மாவட்ட தலைவர் கணேசமூர்த்தி, ஒன்றியசெயலளர்கள் ஏழமலை, தட்சிணாமூர்த்தி, ஒன்றியதுணைசெயலாளர் அருண்குமார், துணைத் தலைவர் ஜானகிராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.