முதல்வரான ஓ.பன்னீர் செல்வம்… செய்தியே சொல்லாத ஜெயா டிவி
சென்னை: தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றதை பற்றியோ, புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டதைப் பற்றியோ ஜெயா டிவியிலும் ஜெயா ப்ளஸ் டிவியிலும் எந்த ஒரு செய்தியுமே 3 மணிவரை கூறவில்லை.
போனால் போகிறதென்று மூன்று மணிக்கு மேல் லேசாக நியூஸ் அப்டேட் என்று ஒருவரி மட்டும் போட்டு நிறுத்தினர்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறைக்கு சென்றதை அடுத்து அவரது முதல்வர் பதவியும், எம்.எல்.ஏ பதவியும் பறிபோனது.
இதனையடுத்து புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் தேர்வு செய்யப்பட்டார். இன்று மதியம் பொறுப்பேற்றுக்கொண்டார். அனைத்து அமைச்சர்களும் கண்ணீர் மல்க பதவியேற்றனர். இந்த நிகழ்வினை அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டன.
ஆனால் ஆளுங்கட்சி டிவியான ஜெயா டிவி, ஜெயா ப்ளஸ் டிவியில் எந்த ஒரு செய்தியும் 3 மணிவரை போடவில்லை. 3.30 மணிக்கு அப்டேட் என்று ஒருவரி போட்டு நிறுத்தினர்.
பின்னர் அரைமணிநேரம் கழித்து போது புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றார் என்று சில நொடிகள் மட்டுமே வாசித்து நிறுத்திவிட்டனர்.
ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பதவியேற்றதையும், அமைச்சர்கள் பதவியேற்றதையும் விரிவாக ஒளிபரப்பாமல் ஆளுங்கட்சி டிவியே புறக்கணித்தது போல இருந்தது.
அதேசமயம் சன்நியூஸ் தொலைக்காட்சியில் பதவியேற்பு நிகழ்ச்சியை முழுவதுமாக ஒளிபரப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.