ஸ்மார்ட் கார்டு இல்லை: 2014-லும் ரேசன் கார்டில் தாள் இணைக்க முடிவு
சென்னை: புதிய ரேஷன் அட்டை வரும் 2014-ஆம் வழங்காமல் இணைப்புத் தாளையே கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது. இது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தேசத்தின் குடிமகன் என்று தன்னை அடையாளம் காட்ட இருக்கும் ஆவணங்களில் முதலாவதாக கருதப்படுவது ரேஷன் அட்டை. அரசுக்கும், மக்களுக்கும் உள்ள உறவுக்கு பாலமாக இருப்பதும் அதுவே.
தமிழக்தில் இதுவரை 1 கோடியே 97 லட்சத்து 82 ஆயிரத்து 593 ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அட்டைகளுக்கு உணவு பொருள்கள் வழங்க 33 ஆயிரத்து 222 கடைகள் உள்ளன.
விலையில்லா அரிசி
மாநில அரசின் சார்பில் விலையில்லா அரிசியும், நியாய விலையில் சர்க்கரை, கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்களும், மண்ணெண்ணெயும் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவு பொருட்களை நம்பியே லட்சக்கணக்கான ஏழை குடும்பங்கள் வாழக்கை நடத்தி வருகின்றனர்.
அரசின் சலுகைகள்
முதியோர், விதவைகள், ஊனமுற்றவர், ஏழைப்பெண் திருமணம் போன்ற பல அரசின் சலுகைகளை பெறவும், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பட்டா போன்ற முக்கிய ஆவணங்களை பெறவும் ரேஷன் கார்டுதான் பிரதானமாக தேவைப்படுகிறது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த, மக்களின் ஆதாரமான ரேஷன் அட்டை வழங்குவதில் அரசு பல நடைமுறைகளை பின்பற்றி போலி அட்டைகளை அழித்து வருகிறது. ரேஷன் அட்டை இல்லை என்றால் பாஸ்போர்ட் இல்லாத வெளிநாட்டு பயணிபோல் திக்கற்று அலையும் நிலைதான் ஏற்படுகிறது.
2005 – 2009 கார்டு
தற்போது புழக்கத்தில் உள்ள ரேசன் அட்டை கடந்த 2005-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ரேசன் கார்டு வழங்கப்பட வேண்டும். அதன்படி 2009-க்கு பிறகு புதிய ரேஷன் அட்டை வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஸ்மார்ட் கார்டு
ஆனால் ஸ்மார்ட் ரேஷன் அட்டை அறிமுகப்படுத்தப்படும் என்று கூறி பழைய ரேஷன் அட்டையிலேயே ஓராண்டுக்கான இணைப்புத் தாளை கொடுத்தனர். அதே காரணம் கூறப்பட்டு அடுத்தடுத்த ஆண்டுகளும் இணைப்புத் தாளிலேயே ஓடிவிட்டது.
5 ஆண்டுகளாக இணைப்பு
கடந்த 4 ஆண்டுகளாக இணைப்பு தாள் ஒட்டியே காலம் கடத்தி விட்டனர். 2014ம் ஆண்டிலாவது புதிய அட்டையோ அல்லது ஸ்மார்ட் அட்டையோ அரசு கொடுக்கும் என்று எதிர்ப்பார்த்திருந்த மக்களுக்கு மீண்டும் இணைப்புத் தாளையே வழங்க முடிவு செய்துள்ளது அரசு.
கந்தலான கார்டு
9 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும் ரேஷன் அட்டை பலரிடம் கிழிந்து கந்தலாகிவிட்டது. வரும் ஆண்டிலாவது புதிய அட்டை கிடைக்கும் என்று எண்ணியிருந்த மக்களுக்கு இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்மார்ட் கார்டு என்னாச்சு?
கடந்த 2012-ல் ஸ்மார்ட் ரேஷன் அட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இதுவரை அதற்கான எந்த பணியும் தொடங்கப்படாமலே உள்ளது. ஸ்மார்ட் அட்டை கிடைக்கும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு கண்டுகொள்ளப்படாமலே உள்ளது.
அக்கறையின்மை
வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றைப் போல ரேஷன் கார்டு விஷயத்தையும் கவனிக்கலாமே என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இணைப்புத்தாள்தான்
இப்போதுள்ள ரேஷன் அட்டையை 2014 வரை பயன்படுத்தலாம். புதிய அட்டை வழங்குவது தொடர்பாக அரசுதான் அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் ஆணையாளர் கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அடையாள அட்டை
அலுவலக பணியாளர்களை மக்கள் எளிதில் அணுகும் வகையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் அடையாள அட்டையை கழுத்தில் அணிந்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அலுவலகத்தில் உள்ள அந்நியர்களின் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியும். பொது மக்களும் ஏமாறமாட்டார்கள் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.