ஆழ்துளை கிணற்றின் மேல் கண்டிப்பாக மூடி போடவேண்டும்.. தமிழக அரசு உத்தரவு
சென்னை: ஆழ்துளை கிணறுகளை அமைப்பதற்கு முன்பு அரசின் அனுமதி பெறப்பட வேண்டும். அரசு விதிக்கும் நிபந்தனைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்
தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் ஆழ்துளை கிணற்றில் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கணேசன்-தமிழ்ச்செல்வி ஆகியோரின் மகன் ஹர்சன் (வயது 3) குத்தாலப்பேரியில் இருந்த தோட்டத்தில் போடப்பட்டு இருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டான். நல்லவேளையாக ரோபோ கருவியின் உதவியுடன் ஹர்சன் மீட்கப்பட்டான்.
இது ஒருபக்கம் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், மறுநாளே திருவண்ணாமலையில் கலசப்பாக்கத்தில் துரை-ஜெயலட்சுமி ஆகியோரின் ஒன்றரை வயது குழந்தை சுஜித் அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டான். ஆனால் அந்த குழந்தையை உயிருடன் மீட்க முடியாமல் போனது. நேற்று அவன் பிணமாக மீட்கப்பட்டான். இது தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
இதுபோன்ற ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் விழும் சம்பவம் ஏற்கனவே நடந்துள்ளன. ஆனாலும் தற்போது அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் அரசு அதிகாரிகள் மத்தியில் அதிர்வலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இனி இப்படி ஒரு சம்பவம் ஏற்படாமல் இருப்பதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
அதன்படி தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம் தலைமைச் செயலகத்தில் கூட்டப்பட்டது.
இந்த கூட்டத்தில் உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, டி.ஜி.பி. ராமானுஜம் மற்றும் தீயணைப்புத்துறை உயர் அதிகாரி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆழ்துளை கிணறுகளை அமைப்பதற்கு முன்பு அரசின் அனுமதி பெறப்பட வேண்டும். அரசு விதிக்கும் நிபந்தனைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
ஆழ்துளை கிணற்றின் மேல்வாயை சாக்குப்பை, தாள் போன்ற கடினமற்ற பொருட்கள் மூலம் மூடுவதை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் மூடி அல்லது கான்கிரீட் பிளேட் போன்ற உறுதியான பொருட்கள் மூலம் மூடுவதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும்.
ஆட்டுக்குட்டிகள், நாய், பூனை போன்ற விலங்குகளும் புகமுடியாத அளவுக்கு ஆழ்துளை கிணற்றின் மேல்வாயைச் சுற்றி முள்கம்பி வேலியை அமைக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு நிபந்தனைகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.