7 வது நாளாக போராடும் நர்சிங் மாணவிகள்: நோயளிகள் பாதிப்பு
சென்னை: தமிழகம் முழுவதும் நர்ஸிங் மாணவர்கள் 7-வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு மட்டுமே, அரசு மருத்துவமனைகளில் பணி வழங்கப்படும் என்ற நிலையை மாற்றி தனியார் பயிற்சிப் பள்ளியில் படித்தவர்களுக்கும் பணி வழங்கும் வகையில் தேர்வு நடத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது.
இதனால், அரசுக் கல்லூரிகளில் படிக்கும் நர்ஸிங் மாணவிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் நர்ஸிங் மாணவர்கள் காலவரையற்ற போராட்டத்தைத் தொடர்ந்து மேற்கொண்டுள்ளனர்.
விடுதிக்கு பூட்டு
சென்னையில் உள்ள 1800 நர்ஸிங் மாணவிகள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர். சென்னையில் போராட்டம் நடத்தும் மாணவிகள் தங்கும் விடுதி பூட்டப்பட்டுள்ளதால் இரவு நேரங்களில் கல்லூரி வளாகத்தில் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவிகளுக்குக் கல்லூரி வளாகத்தில் உள்ள கழிப்பறைகள், விடுதி அறைகள் ஆகியவை நிர்வாகத்தினரால் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
நிர்வாகம் மிரட்டல்
இது குறித்து சென்னை மருத்துவக் கல்லூரி நர்ஸிங் மாணவி ஒருவர் கூறுகையில் "கழிப்பறைகளுக்குச் செல் லும் மாணவிகளிடம் போராட்டத்தைக் கைவிட்டு விடுவேன் என்று கையெழுத்து போட்டுக் கொடுத்தால் கழிப்பறையை பயன்படுத்த அனுமதிக்க முடியும் என்று நிர்வாகம் மிரட்டுகிறது.
இரவு நேரங்களில் விடுதி அறை பூட்டி வைக்கப்பட்டுள்ளதால் வளாகத்தில் திறந்த வெளியில் பனியில் படுத்துக் கொள்கிறோம்'' என்றார்.
பூட்டிய விடுதிக்குள் போராட்டம்
கஸ்தூரிபா காந்தி மருத்துவ மனையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவி கூறுகையில் "விடுதியில் இருந்து வெளியில் விடாமல் பூட்டி வைத்துள்ளனர். ஆதலால் பூட்டிய விடுதிக்குள் இருந்து போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறோம்" என்றார்.
கருப்புத் துணி போராட்டம்:
மதுரை அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை கண்களில் கருப்புத் துணி கட்டி போராட்டம் நடத்தினர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகம் முன் செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவிகள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் புதன்கிழமை முதல் மருத்துவமனை வளாகத்திற்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ரத்தாகும் வரை போராட்டம்
செவிலியர் பணிக்கு தேர்வு நடத்தி அதன் மூலம் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்ற தமிழக அரசின் அரசாணையை உடனே ரத்து செய்ய வேண்டும். அரசாணை ரத்தாகும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.
நோயாளிகள் பாதிப்பு:
திருச்சி அரசு செவிலியர் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தைத் தொடர்வதால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் பாதிப்புக்கு உள்ளாகினர்.
தஞ்சாவூரில்...
இதேபோல் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி நர்சிங் மாணவிகளும் உள்ளிருப்புப் போராட்டம், மனிதச் சங்கிலி உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 7 நாட்களாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நோயாளிகள் சிகிச்சைப் பெற முடியாமல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லையில் போராட்டம்:
திருநெல்வேலியில், 500-க்கும் மேற்பட்டோர் கடந்த 29-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1,500 பேர் உள் நோயாளிகளாகவும், தினமும் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேர் வரை வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். மாணவியரின் போராட்டத்தால் மருத்துவ பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.