நெல்லை திமுக வேட்பாளரை தோற்கடியுங்கள்... மு.க. அழகிரி
திருநெல்வேலி: லோக்சபா தேர்தலில் நெல்லை தொகுதி திமுக வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என்று அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி கூறியுள்ளார்.
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜாவின் 29-ஆவது ஆண்டு திருமண விழாவில் நேற்று மு.க. அழகிரி கலந்து கொண்டு பேசியதாவது:
உண்மையான திமுகவினருக்கு கழகம்தான் பெரிது. அதைவிட பெரிது தலைவர் கருணாநிதி. கட்சியிலிருந்து தாற்காலிக நீக்கம் செய்யப்பட்டது ஏன்? நிரந்தரமாக நீக்கப்பட்டது ஏன்? என்பது அனைவருக்கும் தெரியும்.
உள்கட்சித் தேர்தல் முறைகேடு தொடர்பாக நானே நேரில் சென்று தலைவர் கருணாநிதியிடம் நியாயம் கேட்டேன். அதற்கு என்னையே நீக்கிவிட்டனர். இப்போது லோக்சபா தேர்தலுக்காக உள்கட்சி தேர்தலை நிறுத்தி வைத்துள்ளனர்.
நான் வெளியேறிய பிறகும் தொண்டர்கள் அளிக்கும் வரவேற்பை பார்த்து என்னை முழுவதுமாக கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்பதற்காக பழிச்சொல்லை சுமத்தி நீக்கியுள்ளனர். தலைவரின் உள்ளத்தில் இருந்து அந்தப் பழிச்சொல் வரவில்லை. உதட்டிலிருந்துதான் வந்தது.
அதுவும் சினிமாவில் வில்லன்கள் கத்தியை வைத்து மிரட்டி சொல்லச் சொல்வதைப் போன்று திமுகவில் வில்லன்கள் அந்தச் செயலை செய்துள்ளனர்.
சொத்தை அபகரிக்க கற்றுத் தருகிறார்கள்...
திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல தொகுதிகளில் வேட்பாளர் யாரென்றே தெரியவில்லை. தலைவர் கருணாநிதி நியமித்திருந்தால் கட்சியில் உழைக்கும் தொண்டனுக்கு சீட் வழங்கியிருப்பார். எனக்கு பதவி மீது ஆசையில்லை.
திமுக தலைவர், பொருளாளர், பொதுச்செயலர் உள்ளிட்ட எந்தப் பதவிக்கும் ஆசையில்லை. திமுக வேட்பாளர்களை 3-ஆவது, 4-ஆவது இடத்துக்கு வரும் வகையில் வாக்களிக்க வேண்டும். முதல்வர் ஜெயலலிதா சொல்வதைப் போல கேட்கிறேன். நீங்கள் செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?
அப்படிச் செய்தால்தான் நமக்கு வாழ்வு. இழந்த அந்தஸ்து திரும்பக் கிடைக்கும். திமுகவை மிசா, எமர்ஜென்ஸி, தேர்தலில் படுதோல்வி உள்ளிட்ட துயரமான காலங்களில் கட்டிக் காத்தவர் கருணாநிதி. அவர் இப்போது ஒரு கைதி போல உள்ளார்.
இலங்கைப் பிரச்னை பற்றி பேசும்போது மட்டும் அழைத்து வந்து நாற்காலியில் உட்கார வைத்து அருகில் வீரமணி, சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட கருப்புச் சட்டைக்காரர்கள் அமர்ந்து கொள்கின்றனர். இந்த இருவரும்தான் திமுகவை அழிக்கின்றனர்.
திராவிடர் கழக சொத்தை எப்படி அபகரித்தனரோ, அதேபோல திமுக சொத்தை அபகரிக்க தம்பி ஸ்டாலினுக்கு கற்றுத்தருகின்றனர். கருணாநிதி மதுரை வருகிறார். நான் இருந்தால் மகன் என்ற பாசத்தில் எனது வீட்டுக்கு வந்தால் அவரையும் கட்சியிலிருந்து நீக்கிவிடுவர். அதனால்தான் நான் இங்கே வந்துவிட்டேன்
திருநெல்வேலி மாவட்ட திமுக செயலர் கருப்பசாமி பாண்டியனை மாவீரன் நெப்போலியன் எனக் கூறுகின்றனர். ஒரு வழக்கு காரணமாக மதுரை சிறையில் இருந்தார். தென்மண்டல அமைப்புச் செயலர் என்ற முறையில் சிறையில் சென்று அவரைச் சந்தித்தேன். அப்போது, என்னை எப்படியாவது வெளியே எடுத்து விடுங்கள். இல்லையென்றால் உள்ளேயே செத்து விடுவேன் என்று கண்ணீர் விட்டு அழுதார். அவரது வீரம் இவ்வளவுதான். உண்மையான திமுக தொண்டன் சிறைக்கு அஞ்சமாட்டான்
இவ்வாறு மு.க. அழகிரி பேசினார்.
ஏற்கெனவே தேனியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பொன். முத்துராமலிங்கத்தைத் தோற்கடிக்க வேண்டும் என்று அழகிரி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.