வாக்களித்து விட்டு அமைதியாக சென்ற ஓ.பி.எஸ்; மோடி பிரதமராவார்- ஏ.சி சண்முகம்
கோவை: லோக்சபா தேர்தலில் வாக்களித்த தமிழக நிதியமைச்சர் வழக்கமான புன்னகையோடு அமைதியாக சென்றார்.
தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேனி லோக்சபா தொகுதிக்குட்பட்ட பெரியகுளம் தெற்கு அக்கிரகாரத்தில் உள்ள டிரையம்ப் நடுநிலைப்பள்ளியில் வாக்களித்தார்.
அப்போது அங்கு கூடியிருந்த செய்தியாளர்கள் அவரை போட்டோ, வீடியோ எடுக்க மொய்த்தனர் அமைதியாக சிரித்தவாரே போஸ் கொடுத்தார்.
வேலூர் லோக்சபா தொகுதி பா.ஜ.க.வேட்பாளர் ஏ.சி.சண்முகம் ஆரணி கொசப்பாளையம் பெரிய ஜெயின் தெருவில் ஆதிபகவான் நர்சரி பள்ளியில் இன்று காலை வாக்களித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த தேர்தல் மத்தியில் ஆட்சி மாற்றத்திற்கான லோக்சபா தேர்தல் நரேந்திரமோடி பிரதமராக அமரக்கூடிய சூழ்நிலை உள்ளது. நதிநீர் இணைப்பு தேசியமயமாக்கப்படும். மதநல்லிணக்கம் உருவாக்கப்படும். நாடு நலம் பெறும் என்றார்.
ஓட்டுப்போட்ட சுதீஷ்
சேலம் பாராளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீஷ் இன்று காலை சென்னையில் தனது தயார், மனைவியுடன் சாலி கிராமத்தில் உள்ள வாக்குசாவடியில் ஓட்டுப்பதிவு செய்து விட்டு பின்னர் கார் மூலம் காலை 11.10 மணிக்கு சேலம் வந்தார்.
வெற்றி வாய்ப்பு பிரகாசம்
தொடர்ந்து அவர் பாவடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கருங்கல்பட்டி வீரலட்சுமி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, தாதகாப்பட்டி, சீலநாயக்கன்பட்டி பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாக்குசாவடியை பார்வையிட்டார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுமக்கள், எழுச்சியாக வந்து வாக்களித்து வருகிறார்கள். வெற்றி வாய்ப்பு எங்களுக்கு பிரகாசமாக இருக்கிறது என்றார்.
மாற்றத்திற்கான தேர்தல்
கோவை லோக்சபா தொகுதியின் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் திருப்பூர் அரண்மனைப்புதூர் அரசு நடுநிலைப்பள்ளியில் காலை 7.35மணிக்கு வாக்களித்தார்.
வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் அவர் பேசிய அவர், ஆளுங்கட்சியின் அராஜக போக்கிற்கு எதிராக மக்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். மக்கள் சக்தி முன் பணபலம் எடுபடாது என்பதை மக்கள் நிருப்பித்திருக்கிறார்கள் என்றார்.
மோடியின் புரட்சி
தேசிய ஜனநாயக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும். புது யுகப்புரட்சியை மோடி ஏற்படுத்த இருக்கிறார். மாற்றத்தை விரும்பும் மக்களுக்கு ஏற்றம் கிடைக்கும். கோடிகளை அள்ளி இறைத்தாலும் மக்கள் சக்தி முன் அவை எடுபடாது" என்றார்.
இ.கம்யூனிஸ்ட் சுப்பராயன்
திருப்பூர் தொகுதி இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயன் அங்கேரிபாளையம் சாலை கொங்கு மெட்ரிக் பள்ளியில் இன்று காலை 7மணிக்கு வாக்களித்தார்.